தனியார் நிறுவனம் தயாரித்த 1 லட்சம் கையெறி குண்டுகள் - இந்திய ராணுவத்திடம் ஒப்படைப்பு


தனியார் நிறுவனம் தயாரித்த 1 லட்சம் கையெறி குண்டுகள் - இந்திய ராணுவத்திடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 24 Aug 2021 10:08 PM GMT (Updated: 24 Aug 2021 10:08 PM GMT)

தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 1 லட்சம் கையெறி குண்டுகள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மும்பை,

ராணுவம் மற்றும் விமானப்படையினர் பயன்படுத்தும் 10 லட்சம் நவீன கையெறி குண்டுகளை தயாரித்து வழங்குவதாக மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த இ.இ.எல். நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி மத்திய பாதுகாப்பு துறையுடன் ஒப்பந்தம் செய்து இருந்தது.

இந்தநிலையில் அந்த நிறுவனம் தயாரித்த 1 லட்சம் கையெறி குண்டுகள் நேற்று நடந்த விழாவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் முன்னிலையில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான மாதிரி கையெறி வெடிகுண்டை இ.இ.எல். நிறுவன தலைவர் எஸ்.என்.நிவல், ராஜ்நாத் சிங்கிடம் வழங்கினார். அப்போது ராணுவ அதிகாரி எம்.எம். நரவானே, டி.ஆர்.டி.ஓ. சேர்மன் சதீஸ் ரெட்டி, ஏ.கே. சமந்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்தியாவில் வெடிகுண்டு தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை என இ.இ.எல். நிறுவனம் தெரிவித்து உள்ளது. தனியார் நிறுவனம் தயாரித்து ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ள கையெறி குண்டுகள் கடந்த 2017, 2018-ம் ஆண்டுகளில் பாலைவனம், அதிக வெப்பநிலை நிலவும் கோடைகாலம், குளிர்காலம் ஆகிய பல தட்பவெட்ப நிலையில் வைக்கப்பட்டு கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது ஆகும்.

Next Story