மேகதாது அணை விவகாரம்: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம்


மேகதாது அணை விவகாரம்: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம்
x
தினத்தந்தி 24 Aug 2021 11:51 PM GMT (Updated: 24 Aug 2021 11:51 PM GMT)

மேகதாது அணை திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்க கோரி மத்திய மந்திரிகளை சந்தித்து பேச கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (புதன்கிழமை) டெல்லி செல்கிறார்.

பெங்களூரு, 

கர்நாடகம், தமிழகம் இடையே காவிரி நீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வுகாண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடக அரசு, ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் மேகதாது அணை திட்டம், நதி நீ்ர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை பெறவும், மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நாளை (வியாழக்கிழமை) சந்தித்து பேச உள்ளார். இதற்காக பசவராஜ் பொம்மை இன்று (புதன்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பங்கீடு குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்க நான் டெல்லி செல்ல இருக்கிறேன். கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல், மூத்த வக்கீல்கள், சட்ட நிபுணர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். நதி நீர் பிரச்சினைகளில் கர்நாடக அரசின் அடுத்தக்கட்ட நிலைப்பாடு என்ன என்பது குறித்து அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

கர்நாடகத்தின் நிலம், நீர், மொழியை பாதுகாக்க அனைத்து முயற்சியும் மேற்கொள்வேன். இதில் யாருக்கும் எந்த விதமான ஆதங்கமும் வேண்டாம். நாளை (அதாவது இன்று) டெல்லி செல்கிறேன். 26-ந் தேதி மத்திய மந்திரிகளை சந்தித்து பேச உள்ளேன். இந்த சந்திப்பின்போது கர்நாடகத்தின் வளர்ச்சி குறித்து விவாதிக்க இருக்கிறேன். மத்திய சுகாதாரம், நிதி, ஜல்சக்தி, விவசாயம் மற்றும் ராணுவ துறைகளின் மந்திரிகளை சந்திக்க உள்ளேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story