மேற்குவங்காள தேர்தலுக்கு பிந்தைய வன்முறை: சிபிஐ 11 வழக்குகள் பதிவு


மேற்குவங்காள தேர்தலுக்கு பிந்தைய வன்முறை: சிபிஐ 11 வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 28 Aug 2021 3:40 AM GMT (Updated: 28 Aug 2021 3:40 AM GMT)

மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக சிபிஐ 11 வழக்குகள் பதிவு செய்துள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியானது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது.

இதற்கிடையில், சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து மேற்குவங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் ரீதியிலான வன்முறை வெடித்தது. குறிப்பாக, பாஜக கட்சி, திரிணாமுல் கட்சியினர் இடையே மோதல் வெடித்தது. 

இந்த வன்முறையில் கொலை, கூட்டுபாலியல் பலாத்காரம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இந்த வன்முறை சம்பவம் குறித்து மேற்குவங்காள ஐகோர்ட்டு உத்தரவின் பெயரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், மேற்குவங்காள வன்முறை தொடர்பாக சிபிஐ தரப்பில் இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா, வடக்கு பர்க்னா, பன்குரா, நதியா, கூச் பிஹர் ஆகிய மாவட்டங்களில் இந்த வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. 

அடித்துக்கொலை, குண்டுவீச்சு, கூட்டு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக சிபிஐ தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 99 பேரின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

Next Story