கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; கேரளாவில் இரவு ஊரடங்கில் வாகன சோதனை தீவிரம்


கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; கேரளாவில் இரவு ஊரடங்கில் வாகன சோதனை தீவிரம்
x
தினத்தந்தி 31 Aug 2021 2:24 AM GMT (Updated: 31 Aug 2021 2:24 AM GMT)

கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த சூழலில் இரவு ஊரடங்கில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.


திருவனந்தபுரம்,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச்சில் ஊரடங்கு அமலானது.  கொரோனா 2வது அலையில் முதல் அலையை விட அதிக பாதிப்புகள் காணப்பட்டன.  இந்நிலையில், தொற்று எண்ணிக்கை சமீப நாட்களாக குறைந்து காணப்படுகிறது.

எனினும், கேரளாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பினராயி விஜயன் தலைமையிலான அரசு, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியது.

அதன்பிறகு ஒரு மாதத்திற்கு ஞாயிறு மட்டும் ஊரடங்கு நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது.  எனினும், அத்தியாவசிய கடைகள் திறக்கவும், வாகனங்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டன.

இந்த சூழலில், சுதந்திர தினம், ஓணம் பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன.  இது கொரோனா பரவலுக்கு வழிவகுத்தது.  இதனை முன்னிட்டு கடந்த ஞாயிற்றி கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்துவது என அரசு முடிவு செய்தது.

இதன்படி, அத்தியாவசிய தேவையின்றி இயங்கும் வாகனங்கள், வெளியே சுற்றி திரிபவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.  இதனால், சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடிய நிலை காணப்பட்டது.  விடுமுறை நாளான அன்று மிக குறைந்த அளவிலேயே வாகனங்கள் இயங்கின.

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்த சூழலில், இரவு ஊரடங்கு பிறப்பிக்கும் முடிவுக்கு அரசு வந்தது.  இதனை முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்த நிலையில், நேற்றிரவு இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.

இதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இரவு ஊரடங்கில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  வாகன சோதனை கடுமையாக்கப்பட்டது.  அவசிய தேவையின்றி வெளியே சுற்றுவோருக்கு தடை விதிக்கப்பட்டது.  வேறு ஊருக்கு பயணிப்போர், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் என வாகனங்களில் வருவோரிடம் தீர விசாரித்து, பின்பு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.


Next Story