தேர்தலுக்கு பிந்தைய வன்முறை: சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்காள அரசு மேல்முறையீடு


தேர்தலுக்கு பிந்தைய வன்முறை: சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்காள அரசு மேல்முறையீடு
x
தினத்தந்தி 1 Sep 2021 3:35 PM GMT (Updated: 1 Sep 2021 3:35 PM GMT)

மேற்குவங்காளத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆகஸ்ட் 19-ம் தேதி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியானது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது.

சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து மேற்குவங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் ரீதியிலான வன்முறை வெடித்தது. குறிப்பாக, பாஜக கட்சி, திரிணாமுல் கட்சியினர் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் கொலை, கூட்டுபாலியல் பலாத்காரம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இந்த வன்முறை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஆகஸ்ட் 19-ம் தேதி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து, விசாரணையை தொடங்கிய சிபிஐ மேற்குவங்காள வன்முறை தொடர்பாக இதுவரை 31 வழக்குகளை பதிவு செய்துள்ளது. கொல்கத்தா, வடக்கு பர்க்னா, பன்குரா, நதியா, கூச் பிஹர் ஆகிய மாவட்டங்களில் இந்த வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. 

அடித்துக்கொலை, குண்டுவீச்சு, கூட்டு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக சிபிஐ தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேற்குவங்காள தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து மேற்குவங்காள அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. 

சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மேற்குவங்காள அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story