புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு பிரதமரிடம் நேரில் வலியுறுத்துவேன்: முதல்-அமைச்சர் ரங்கசாமி


புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு பிரதமரிடம் நேரில் வலியுறுத்துவேன்: முதல்-அமைச்சர் ரங்கசாமி
x
தினத்தந்தி 2 Sep 2021 1:21 AM GMT (Updated: 2 Sep 2021 1:21 AM GMT)

ஆதிதிராவிட முதியோர் பெற்று வரும் உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்படும். மாநில அந்தஸ்து கேட்டு பிரதமரிடம் நேரில் வலியுறுத்துவேன் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

மாநில அந்தஸ்து

பட்ஜெட் மீதான விவாதத்தில் நேற்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசும்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் ரூ.9,924 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் கொடை 60 சதவீதம் நமக்கு கிடைத்துள்ளது. அது வரும் காலத்தில் 90 சதவீதம் கிடைக்கும் என்று நம்புகிறேன். மத்திய அரசு நமக்கு இந்த பட்ஜெட்டில் கூடுதலாக 1.5 சதவீதம் தான் நிதி அளித்துள்ளது என்று கூறுகின்றனர். உண்மை தான்.ஏனென்றால் கடந்த ஜனவரி மாதமே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாம் மே மாதம் தான் ஆட்சிக்கு வந்தோம். இதனால் உடனடியாக மத்திய அரசு நமக்கு கூடுதல் நிதி தரவில்லை. ஆனாலும் மத்திய அரசு நமக்கு கூடுதல் நிதி தரும் என்ற நம்பிக்கை உள்ளது.ஏற்கனவே பிரதமரிடம் கூடுதலாக ரூ.500 கோடி நிதி கேட்டுள்ளோம். இதை மீண்டும் வலியுறுத்தி பெறுவோம். அதிக நிதி பெற வேண்டும் என்பதே மாநில அரசின் எண்ணம். மத்திய அரசும் நமக்கு ஒத்துழைப்பு அளிக்கும். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய நோக்கமே புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவது தான். மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்போம்.

நேரில் வலியுறுத்துவேன்
நீண்ட காலம் முதல்அமைச்சராக இருந்த அனுபவத்தில் கூறுகிறேன். மாநில அந்தஸ்து இல்லாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம் என எனக்கு நன்றாக தெரியும். இது தொடர்பாக நான் ஏற்கனவே பிரதமரிடம் கேட்டுள்ளேன். இதில் மத்திய அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது.தனிமாநில அந்தஸ்து தொடர்பாக இந்த கூட்டத்தொடரிலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவோம். நான் நேரில் டெல்லி செல்லும் போதும் பிரதமரை சந்தித்து புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்துவேன். புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
விவசாயிகளுக்கு பாசிக், பாப்ஸ்கோ போன்ற நிறுவனங்கள் எவ்வளவு உறுதுணையாக இருந்தது என இப்போதுதான் தெரிகிறது. விவசாயிகள் இடுபொருட்கள், உபகரணங்கள் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர்.அந்த நிறுவனங்களை லாபகரமாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காக 33 மது பார், 5 பெட்ரோல் பங்க் செயல்பட அனுமதி அளித்தோம். அவ்வாறு இருந்தும் அந்த நிறுவனங்கள் எவ்வாறு நலிவடைந்தது? என தெரியவில்லை. மீண்டும் அந்த நிறுவனங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்து இயங்கச் செய்வோம். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

கல்விக்கடன் தள்ளுபடி
விற்கப்பட்ட வீட்டு மனைகள், பிரிக்கப்பட்ட வீட்டு மனைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தியாகிகள் பென்ஷன் தற்போது ரூ.9 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.பாட்கோவில் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை தள்ளுபடி செய்துள்ளோம். இதேபோல் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகம் மூலம் மாணவர்கள் பெற்ற கல்விக்கடனும் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். சுற்றுலாவை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

ஆதிதிராவிடர் முதியோர் உதவித்ெதாகை உயர்வு
அரசின் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். விரைவில் காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி இல்லாமல் எந்த பணியும் செய்ய முடியாது.எனவே அவர்களுக்கு இந்த நிதியாண்டில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி வழங்கப்படும். முதல் கட்டமாக ரூ.1 கோடியும், அதன்பின் மேலும் ரூ.1 கோடியும் வழங்கப்படும்.ஆதிதிராவிட மக்கள் வீடு கட்ட ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. அதனை ரூ.5 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். ஆதிதிராவிட மக்களில் முதியோர் பெறும் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். அவர்கள் குடும்பத்தினர் இறந்தால் இறுதிச்சடங்கு செலவுக்கு வழங்கப்படும் ரூ.15 ஆயிரம், ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

கல்வி கட்டணம் அரசே ஏற்கும்
அம்பேத்கர் மணிமண்டபத்தின் பின்புறம் ஆதிதிராவிட மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்கப்படும். சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் வருமான வரம்பின்றி அனைத்து மாணவர்களின் கல்வி கட்டணத்தையும் அரசே முழுமையாக ஏற்கும். பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இதேபோல் புதுவையில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள தினக்கூலி ஊழியர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தேசிய சுகாதார இயக்கக ஊழியர்களை கொண்டு நிரப்பப்படும். சுகாதாரத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க அரசு உத்தேசித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னர் அது வழங்கப்படும். வடிசாராய ஆலை ஊழியர்களுக்கு தினக்கூலி ரூ.450 ஆக உயர்த்தப்படும். மாநில வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு அனைத்து தரப்பினரும் வரவேற்க கூடிய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story