கேரள பஞ்சாயத்து அலுவலகத்தில் ‘சார்’, ‘மேடம்’ வார்த்தைகளுக்கு தடை


கேரள பஞ்சாயத்து அலுவலகத்தில் ‘சார்’, ‘மேடம்’ வார்த்தைகளுக்கு தடை
x
தினத்தந்தி 3 Sep 2021 1:09 AM GMT (Updated: 3 Sep 2021 1:09 AM GMT)

இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் பணியாற்றும் அதிகாரிகளை, ஆண் என்றால் ‘சார்’ என்றும், பெண் என்றால் ‘மேடம்’ என்றும் பொதுமக்கள் அழைக்கிறார்கள். அதைப்போல அங்கு பணிபுரியும் ஊழியர்களும் தங்களுக்குள்ளே இந்த வார்த்தைகளையே பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் இந்த நடைமுறையை முதல் முறையாக மாற்றிக்காட்டியிருக்கிறது, கேரளாவின் மாத்தூர் பஞ்சாயத்து அலுவலகம். பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த இந்த பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் அதன் வளாகத்தில் யாரும் இந்த வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் ஆளும் இந்த பஞ்சாயத்தில், இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரித்து ஒருமனதாக நிறைவேற்றி உள்ளனர்.

இதன் மூலம் பொதுமக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையேயான இடைவெளி நீங்கி, இணைக்கம் பிறக்கும் என பஞ்சாயத்து துணைத்தலைவர் பிரசாத் கூறியுள்ளார். இனிமேல் பஞ்சாயத்து அலுவலகம் செல்லும் யாரும், அங்கே பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை பெயர் சொல்லியோ அல்லது அவர்களது பதவியை வைத்தோ அழைத்தால் போதும். ஆனால் வயதுக்கு மூத்தவர்களை அப்படி அழைப்பது அசவுகரியமாக தெரிந்தால், ‘சேட்டன்’ (அண்ணா), ‘சேச்சி’ (அக்கா) என்று அழைக்கலாம். இதைப்போல ‘விண்ணப்ப படிவம்’ (அபேக்ஷ படிவம்) என்பதற்கு பதிலாக ‘அவகாச பத்திரிகா’ (உரிமை சான்றிதழ்) என மாற்றம் செய்யவும் பஞ்சாயத்து முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாத்தூர் பஞ்சாயத்து நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை நாட்டுக்கே முன்னுதாரணமாக இருப்பது மட்டுமின்றி, அந்த பகுதியினரிடம் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Next Story