ரெயிலில் அரை நிர்வாண கோலம்: பீகார் எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு


ரெயிலில் அரை நிர்வாண கோலம்: பீகார் எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 5 Sep 2021 7:59 PM GMT (Updated: 5 Sep 2021 7:59 PM GMT)

பீகாரின் கோபால்பூர் தொகுதி ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ.வான கோபால் மண்டல், கடந்த 2-ந்தேதி டெல்லி தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெறும் உள்ளாடையுடன் உலவினார்.

பாட்னா, 

பீகாரின் கோபால்பூர் தொகுதி ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ.வான கோபால் மண்டல், கடந்த 2-ந்தேதி டெல்லி தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெறும் உள்ளாடையுடன் உலவினார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் மோதலும் ஏற்பட்டது. பின்னர் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர் இணைந்து, எம்.எல்.ஏ.வை வேறு பெட்டிக்கு மாற்றினர்.

வயிற்று உபாதை காரணமாக அவசரமாக கழிவறைக்கு சென்றதால், அந்த கோலத்தில் இருந்ததாக எம்.எல்.ஏ. பின்னர் விளக்கம் அளித்தார். எனினும் ஓடும் ரெயிலில் எம்.எல்.ஏ. ஒருவர் அரை நிர்வாண கோத்தில் இருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் ரெயிலில் நடந்த தகராறில் எம்.எல்.ஏ.வும், அவரது ஆதரவாளர்களும் தன்னை தாக்கியதாகவும், தனது சாதி பெயரை கூறி அவமதித்ததாகவும் பிரகலாத் பஸ்வான் என்ற பயணி டெல்லி ரெயில்வே போலீசில் புகார் செய்துள்ளார். அது பீகாரின் அர்ரா போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி எம்.எல்.ஏ. மீது எஸ்.சி., எஸ்.டி. சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.


Next Story