உத்தரபிரதேசத்தில் தினமும் படகு ஓட்டி பள்ளிக்கு செல்லும் மாணவி


உத்தரபிரதேசத்தில் தினமும் படகு ஓட்டி பள்ளிக்கு செல்லும் மாணவி
x
தினத்தந்தி 6 Sep 2021 7:30 PM GMT (Updated: 6 Sep 2021 7:30 PM GMT)

உத்தரபிரதேசத்தில் பள்ளி மாணவி சந்தியா சாஹினி வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்ல தினமும் ஆற்றில் படகை ஓட்டி செல்கிறார்.

உத்தரபிரதேசம் மாநிலம் பஹ்ராம்பூரில் கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் அந்த கிராமத்தில் உள்ள 11-ம் வகுப்பு பள்ளி மாணவி சந்தியா சாஹினி வீட்டில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் உள்ள தனது பள்ளிக்கு செல்ல தினமும் ஆற்றில் படகை ஓட்டி செல்கிறார். பள்ளிச்சீருடையில் மாணவி படகில் பயணம் செய்யும் காட்சி வைரலாகி அனைவரது பாராட்டுதலை பெற்று உள்ளது.

இது குறித்து சந்தியா சாஹினி கூறியதாவது:-

கொரோனா தொற்று பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் பள்ளி நீண்ட காலமாக மூடப்பட்டது. தற்போது வெள்ளத்தின் சவாலை எதிர்கொள்கிறோம். என்னிடம் ஸ்மார்ட்போன் இல்லாததால் என்னால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது கனமழையால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. எனது படிப்புக்காக நான் முழுமையாக பள்ளியை நம்பி உள்ளேன். அதனால் நான் படகில் பள்ளியை அடைய முடிவு செய்தேன். என் பகுதியில் உள்ள பல மாணவிகள் பள்ளிக்கு செல்வதில்லை. ஏனென்றால் அவர்கள் வெள்ள நீருக்கு பயப்படுகிறார்கள். ஆனால் எனக்கு பயப்பட நேரமில்லை. எனது குறிக்கோள் எனது இலக்கை அடைய நான் தினமும் கடினமாக உழைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story