ஜாவேத் அக்தர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? பாஜக கேள்வி


ஜாவேத் அக்தர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? பாஜக கேள்வி
x
தினத்தந்தி 6 Sep 2021 8:00 PM GMT (Updated: 6 Sep 2021 8:00 PM GMT)

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தலீபான்களுடன் ஒப்பிட்ட இந்தி சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தருக்கு பா.ஜனதா, சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளன.

மும்பை, 

இந்தி சினிமா பாடலாசிரியர் மற்றும் உருது கவிஞராக விளங்குபவர் ஜாவேத் அக்தர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும், தலீபான்களையும் ஒப்பிட்டு கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் அவர், “உலகெங்கிலும் உள்ள வலதுசாரிகள் விசித்திர ஒற்றுமையை கொண்டுள்ளனர். தலீபான்கள் இஸ்லாமிய நாட்டை உருவாக்க விரும்புகிறார்கள். இதேபோல் இங்கு உள்ளவர்கள் இந்து தேசத்தை உருவாக்க விரும்புகிறார்கள் என்றார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெயரை குறிப்பிடாமல் ஜாவேத் அக்தர் இந்த கருத்தை கூறியிருந்தாலும் அவருக்கு பா.ஜனதா மற்றும் மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள சிவசேனாவும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மராட்டிய பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராம் கதம் எம்.எல்.ஏ. கூறுகையில், ‘ஜாவேத் அக்தர் தனது கருத்துக்காக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை அவர் பணியாற்றி உள்ள எந்த சினிமா படத்தையும் நாட்டில் திரையிட அனுமதிக்க கூடாது’ என்று வலியுறுத்தினார். மேலும், ஜாவேத் அக்தர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும்  அவர் கேள்வி எழுப்பினார். 

Next Story