கேரளா-தமிழக எல்லையில் அனைத்து சாலைகளிலும் சிறப்பு மருத்துவ குழு!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Sep 2021 1:55 AM GMT (Updated: 7 Sep 2021 1:55 AM GMT)

நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக கேரளா-தமிழக எல்லையில் அனைத்து சாலைகளிலும் சிறப்பு மருத்துவ குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளது.

சென்னை, 

கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து சாலைகளிலும் சிறப்பு மருத்துவ குழு நிறுத்தவும், சாலை மார்க்கமாக வருகிறவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்யவும், நிபா வைரஸ் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் 23-க்கும் மேற்பட்டவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆளான 12 வயது சிறுவன் உயிரிழந்து உள்ளான். இதையடுத்து தமிழகத்துக்கு நிபா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்களுக்கு செய்யப்பட வேண்டிய பரிசோதனை குறித்தும், தேவையான தடுப்பு நடவடிக்கை குறித்தும் அனைத்து மாவட்ட துணை பொது சுகாதார இயக்குனர்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பாதிப்பு மனிதர்களுக்கு ஏற்படுகிறது. நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். நோய் தொற்று பாதிப்பு அதிகரித்தால் அவர்கள் கோமா நிலைக்கு செல்லக்கூடும். மேலும் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரசால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கேரளாவில் இருந்து தமிழகம் வருகிறவர்களில் நிபா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை கண்டறிய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குனர்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.

மேலும் கேரளாவின் எல்லை பகுதியில் உள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கேரளாவை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிறப்பு மருத்துவ குழு கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டும். கேரளாவில் இருந்து வருகிறவர்களில் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்களை முறையாக தனிமைப்படுத்த வேண்டும்.

மேலும் அவர்களின் ரத்தம், சிறுநீர், சளி மாதிரிகள், முதுகு தண்டுவட நீர் உள்ளிட்டவைகள் எடுக்கப்பட்டு, உரிய பாதுகாப்புடன் முதற்கட்ட ஆய்வுக்கு சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த ஆய்வின் முடிவை உறுதி செய்ய பூனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட வேண்டும். நிபா வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தொடர்ந்து 21 நாள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story