"கோடநாடு வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது" - சுப்ரீம் கோர்ட்டு


கோடநாடு வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 7 Sep 2021 10:55 AM GMT (Updated: 7 Sep 2021 10:55 AM GMT)

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் விசுவரூபம் எடுத்து வரும் நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக உதகை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்படும் என்று எஸ்.பி ஆசிஷ் ராவத் தெரிவித்திருந்தார். இந்த தனிப்படை கோடநாடு கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகி உள்ளது. கொடநாடு வழக்கை பொறுத்தவரை தற்போது தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாகவே காவல்துறை இந்த கோடநாடு வழக்கு தொடர்பாக விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் சயான் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. மேலும் இந்த வழக்கின் சாட்சியாக கருதப்படும் அனுபவ் ரவி காவல் துறையின் மேல் விசாரணைக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து, மேல் விசாரணை செய்ய முழு அனுமதி உள்ளது என்று  தெரிவித்திருந்தது. 

இதனைத்தொடர்ந்து ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் அனுபவ் ரவி  மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில் கோடநாடு வழக்கின் மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு சுப்ரீம்கோர்ட் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தின் அனுமதியின்றி மேல்விசாரணை நடத்தப்படுவதாகவும் மேல்விசாரணை நடத்திக்கொண்டே போனால் வழக்கின் விசாரணை முடிவில்லாமல் தான் செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மனுதாரர் வாதத்தை கேட்ட நீதிபதிகள் மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை என்றும் கோடநாடு விவகாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது போல் இருக்கிறது என கூறிய நீதிபதிகள் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் கோடநாடு விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என கூறி அனுபப் ரவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story