மம்தா பானர்ஜியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப் போவது இல்லை; காங்கிரஸ்


மம்தா பானர்ஜியை எதிர்த்து  வேட்பாளரை நிறுத்தப் போவது இல்லை; காங்கிரஸ்
x
தினத்தந்தி 7 Sep 2021 8:31 PM GMT (Updated: 7 Sep 2021 8:31 PM GMT)

மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இதில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். 

இருப்பினும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றதால், மம்தா பானர்ஜி முதலமைச்சரானார். 6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்க வேண்டும் என்ற சூழலில், மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில், பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 

பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துமா?என்பதில் பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்த நிலையில்,  வேட்பாளரை நிறுத்தப் போவது இல்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “ மம்தா பானர்ஜிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது பாஜகவுக்கு மறைமுகமாக உதவுவது போல் இருக்கும். ஆகவே,எங்களின் கட்சி தலைமை இதை விரும்பவில்லை”  என்றார். 

Next Story