உத்தரபிரதேசம்: சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் பலி


உத்தரபிரதேசம்: சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் பலி
x
தினத்தந்தி 8 Sep 2021 12:21 AM GMT (Updated: 8 Sep 2021 12:21 AM GMT)

உத்தரபிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் விளையாடிக்கொண்டிருந்த 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. கனமழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்தன.

இந்நிலையில், அமேதியின் தோடர்பூர் மஜ்ரி ஜமூர்வன் கிராமத்தை சேர்ந்த 5 குழந்தைகள் தங்கள் கிராமத்தில் உள்ள ஒரு வீடு அருகே விளையாடிக்கொண்டிருந்தனர். கனமழையால் அந்த வீடு மிகுந்த சேதமடைந்திருந்த நிலையில் திடீரென வீட்டின் சுவர் இடிந்து விளையாடிக்கொண்டிருந்த 5 குழந்தைகள் மீது விழுந்தது.

இந்த விபத்தில் குழந்தைகள் 5 பேரும் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 5 குழந்தைகளையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் குழந்தைகளை பரிசோதனை செய்த டாக்டர் 3 குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உயிரிழந்த குழந்தைகளின் பெயர்கள் முறையே திவ்யஷின் (6), வன்ஷூ (8) மற்றும் சத்யம் (10) ஆகும். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story