மராட்டியத்தில் மட்டும் தான் கொரோனா 3-வது அலை; மத்திய மந்திரி நாராயண் ரானே விமர்சனம்


மராட்டியத்தில் மட்டும் தான் கொரோனா 3-வது அலை; மத்திய மந்திரி நாராயண் ரானே விமர்சனம்
x
தினத்தந்தி 9 Sep 2021 2:41 AM GMT (Updated: 9 Sep 2021 2:41 AM GMT)

நாட்டில் வேறு எங்கும் இல்லை, மராட்டியத்தில் மட்டும் 3-வது கொரோனா அலை உள்ளது என மத்திய மந்திரி நாராயண் ரானே விமர்சித்து உள்ளார்.

நாராயண் ரானே விமர்சனம்

மத்திய மந்திரி நாராயண் ரானே கொரோனா 3-வது அலை விவகாரத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை விமர்சித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கொரோனா 3-வது அலை மராட்டியத்தில் மட்டும் தான் உள்ளது. நாட்டின் வேறு எந்த பகுதியிலும் இல்லை. வீட்டுக்குள் இருக்க வேண்டும் என கூறி உத்தவ் தாக்கரே மக்களிடம் அச்சத்தை விதைத்து வருகிறார். அவருக்கு கைகளை கழுவது, முககவசம் அணிவது பற்றி மட்டுமே பேச தெரியும்.முதல்-மந்திரி இந்துக்களின் பண்டிகை கொண்டாட்டங்களை நிறுத்த உத்தரவிடுகிறார். அதே நேரத்தில் மற்றவர்களின் வீடுகளின் மீது கல் எறிபவர்களை பாராட்டுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த மாதம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறைவேன் என பேசிய நாரயண் ரானேயை கண்டித்து அவரது வீடு முன் சிவசேனா இளைஞர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையம் திறப்பு
இதேபோல சிந்துதுர்க் மாவட்டம் சிப்பி விமான நிலைய திறப்பு விழாவில் மத்திய விமான போக்குவரத்துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா கலந்து கொள்வார் எனவும் நாராயண் ரானே கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நானும், சிந்தியாவும் டெல்லியில் இருந்து மும்பை செல்வோம். அங்கிருந்து விமான நிலைய திறப்பு விழாவில் கலந்து கொள்ள சிந்துதுர்க் செல்வோம்" என்றார்.

அப்போது விழாவில் முதல்-மந்திரி கலந்து கொள்வாரா? என கேட்டபோது, "விமான சேவைக்கு அனுமதி கொடுக்கும் மத்திய மந்திரி கலந்து கொள்ளும் போது, முதல்-மந்திரியின் தேவை என்ன?. சிவசேனா தலைமையிலான அரசு கொங்கன் மண்டலத்திற்கு எதுவும் செய்யவில்லை" என்றார்.

Next Story