தமிழகம், புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல்


தமிழகம், புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல்
x
தினத்தந்தி 9 Sep 2021 10:52 PM GMT (Updated: 9 Sep 2021 10:52 PM GMT)

தமிழகம், புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு 3 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி நடக்கிறது.

புதுடெல்லி,

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 18 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அதில் 3 மாநிலங்களவை எம்.பி. இடங்கள் காலியாக இருந்தன.

மாநிலங்களவை எம்.பி.

அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த முகமது ஜான் திடீரென மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, காலியான அந்த இடத்துக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க. வேட்பாளர் முகமது அப்துல்லா போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டனர்.

இதில் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியிலும், ஆர்.வைத்திலிங்கம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியிலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்கள். இதனையடுத்து 2 பேரும் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.

அடுத்த மாதம் 4-ந்தேதி தேர்தல்

இதனால் இந்த 2 இடங்களும் காலியாக உள்ளன. இதில் கே.பி.முனுசாமியின் எம்.பி. பதவிக்காலம் 2-4-2026 வரையிலும், ஆர்.வைத்திலிங்கத்தின் எம்.பி. பதவிக்காலம் 29-6-2022 வரையிலும் இருந்தது.

இந்த 2 காலியிடங்களுக்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகார பூர்வமாக தெரிவித்தது.

வேட்புமனு தாக்கல்

இந்த தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. 22-ந்தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 23-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை திரும்பப்பெற 27-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

இதில் போட்டி இருந்தால் அக்டோபர் 4-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். முடிவுகள் அன்று மாலையிலேயே அறிவிக்கப்படும்.

தேர்தலை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடத்த, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், தேர்தல் நடைபெறும் சம்பந்தப்பட்ட 6 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருக்கிறது.

தி.மு.க.வுக்கு வாய்ப்பு

தற்போது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் அந்த கட்சிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது.

எனவே தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அறிவிக்கும். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களை அறிவிப்பார்களா? என்று தெரியவில்லை.

புதுச்சேரியிலும் தேர்தல்

தமிழ்நாடு போல மேற்கு வங்காளம், அசாம், மத்திய பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கும் அதே நாளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதைப்போல புதுச்சேரி மாநிலங்களவை அ.தி.மு.க. எம்.பி. கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் 6-10-2021 அன்று முடிவடைகிறது. எனவே அந்த இடத்துக்கும் அதே தேதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பீகார் மாநில சட்டப்பேரவையின் மேலவையில் காலியாக உள்ள ஒரு இடத்துக்கும் இதே தேதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


Next Story