ஊழல் வழக்கில் இருந்து மந்திரி சகன் புஜ்பால் விடுவிப்பு சிறப்பு கோர்ட்டு உத்தரவு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 10 Sep 2021 4:21 AM GMT (Updated: 10 Sep 2021 4:21 AM GMT)

மகராஷ்டிரா சதன் ஊழல் வழக்கில் இருந்து மந்திரி சகன் புஜ்பால் விடுவிக்கப்பட்டார்.

மும்பை,
மகராஷ்டிரா சதன் ஊழல் வழக்கில் இருந்து மந்திரி சகன் புஜ்பால் விடுவிக்கப்பட்டார். 
 ஊழல் புகார்
மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில் உணவு மற்றும் வினியோகத்துறை மந்திரியாக இருப்பவர் தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் சகன்புஜ்பால் (வயது 73). இவர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தார். அப்போது டெல்லியில் மகராஷ்டிரா சதன் என்ற அரசு விருந்தினர் மாளிகை கட்டப்பட்டது. 
இந்த கட்டிடம் கட்டியதில் 2005-2006-ம் ஆண்டில் மந்திரி சகன் புஜ்பால் மற்றும் கட்டிட ஒப்பந்த நிறுவனமான கே.எஸ்.சமான்கர் என்டர்பிரைசஸ் இடையே பேரம் நடந்ததாகவும், அந்த நிறுவனத்திடம் இருந்து மந்திரி சகன் புஜ்பால் ரூ.13 கோடியே 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றம் சாட்டினர். இந்த லஞ்ச பணம் சகன் புஜ்பால் குடும்பத்தினர் நடத்தும் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது.
வழக்குப்பதிவு 
 இதற்கு பிரதி பலனாக மகராஷ்டிரா சதன் மற்றும் இதர பொதுப்பணித்துறை ஒப்பந்த பணிகள் மூலம் எஸ்.கே. சமான்கர் என்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.190 கோடி ஆதாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. 
இது தொடர்பாக பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சியின்போது 2015-ம் ஆண்டு  லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
ஆதாரம் இல்லை
இது தொடர்பான வழக்கு விசாரணை மும்பை சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட மந்திரி சகன் புஜ்பால், அவரது மகன் பங்கஜ் புஜ்பால், உறவினர் சமீபர் புஜ்பால் உள்பட 8 பேர் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தனர். 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் 2016-ம் ஆண்டு ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால் எங்கள் மீதான விசாரணையை தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை. போலீசாரின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது. அவர்கள் தவறான கணக்கீடுகள் மூலம் முறைகேடு புகார்களை சுமத்தி உள்ளனர். எனவே தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
விடுவிப்பு
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, மந்திரி சகன் புஜ்பால் உள்பட 8 பேரையும் ஊழல் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. 
மகராஷ்டிரா சதன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை சார்ந்த ஊழல் தொடர்பாக நடந்த சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சகன் புஜ்பாலை அமலாக்கத்துறை கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்தது. இதைத்தொடர்ந்து அவர் 2 ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story