பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும்காஷ்மீரின் பன்முக கலாசாரத்தை உடைக்க முயற்சிக்கின்றன ராகுல்காந்தி குற்றச்சாட்டு


பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும்காஷ்மீரின் பன்முக கலாசாரத்தை உடைக்க முயற்சிக்கின்றன ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Sep 2021 10:57 PM GMT (Updated: 10 Sep 2021 10:57 PM GMT)

பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் காஷ்மீரின் பன்முக கலாசாரத்தை உடைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஜம்மு சென்றார். அங்கு அவர் புகழ்பெற்ற மாதா வைஸ்ணவி தேவி கோவிலில் நேற்று முன்தினம் வழிபாடு செய்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஜம்முவில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். மீது குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உள்நாட்டு உற்பத்தி சரிவு

காஷ்மீருக்கு வந்திருப்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதேநேரம் சோகத்திலும் உள்ளேன். மாதா வைஸ்ணவி தேவி கோவிலுக்கு சென்றபோது துர்கா ஜி, லட்சுமி ஜி, சரஸ்வதி ஜி ஆகியோரின் சின்னங்களை பார்த்தேன்.

அனைத்து விதமான தீமைகளிலும் இருந்து நம்மை துர்கா ஜி பாதுகாக்கிறார். உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கு லட்சுமி ஜி சக்தியை தருகிறார். அதைப்போல சரஸ்வதி ஜி நமக்கு அறிவை வழங்குகிறார்.

பணமதிப்பு நீக்கத்தால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை சரிவுக்கு தள்ளியதன் மூலம் லட்சுமி ஜியின் சக்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. தங்களை இந்துக்கள் என கூறும் சிலர் மக்களையும் பலவீனப்படுத்தி இந்த சின்னங்களின் சக்திகளையும் அழிக்கின்றனர்.

அச்சத்தை ஏற்படுத்துகிறது

மதம் மற்றும் பிராந்தியத்தின் பெயரில் ஜம்மு-காஷ்மீர் மக்களை பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் பிரிக்க முயற்சிக்கின்றன. மேலும் இங்குள்ள பன்முக கலாசாரத்தை உடைக்க பார்க்கின்றன. இதனால் கடும் ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளேன்.

மக்களிடையே வெறுப்பை பரப்புவதுடன், அவர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பா.ஜனதா ஏற்படுத்துகிறது. ஆனால் அன்பு மற்றும் பாசத்தின் மறுபெயர்தான் காங்கிரஸ்.

காஷ்மீரின் அமைதி மற்றும் சகோதரத்துவத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதன் மூலம் இங்குள்ள பன்முக கலாசாரத்தை பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் பலவீனப்படுத்துகின்றன.

மாநில அந்தஸ்து பறிப்பு

காஷ்மீரின் மாநில அந்தஸ்தை பா.ஜனதா பறித்துக்கொண்டது. இதனால் காஷ்மீர் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்தும் பொருளாதாரத்தை சீரழித்தது குறித்தும் பா.ஜனதாவிடம் கேட்க வேண்டும்.

காஷ்மீர் பண்டிட் சகோதரர்களின் குழு ஒன்றை நான் சந்தித்தேன். நானும் அவர்களில் ஒருவன்தான். எனவே அவர்களுக்கு உதவுவேன் என அந்த சகோதரர்களுக்கு உறுதியளித்தேன்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Next Story