மும்பை உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சிவசேனா


மும்பை உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சிவசேனா
x
தினத்தந்தி 13 Sep 2021 7:55 PM GMT (Updated: 13 Sep 2021 7:55 PM GMT)

கற்பழிப்பு சம்பவம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மும்பை உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என சிவசேனா கூறியுள்ளது.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
மும்பை சாக்கிநாக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை 34 வயது பெண் ஒருவர் டெம்போவில் வைத்து கற்பழிக்கப்பட்டதுடன், அந்தரங்க பாகங்களில் இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரும் கண்டனங்கள் எழுந்த நிலையில் இதில் தொடர்புடைய 45 வயது நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மும்பையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தநிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் நேற்று இதுகுறித்து கூறியிருந்ததாவது:-

ஹத்ராஸ் சம்பவம்
சாக்கிநாக்காவில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆனாலும் மும்பை உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படவேண்டியதில்லை. சாக்கிநாக்காவில் நடைபெற்ற பெண் கற்பழிப்பு, கொலை சம்பவங்கள் கொடூர வக்கிர புத்தியின் விளைவாகும். இது உலகின் அனைத்து பகுதியிலும் காணப்படுகிறது. இந்த சம்பவத்தை உத்தரபிரதேசத்தில் 19 வயதான தலித் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட ஹத்ராஸ் சம்பவத்துடன் ஒப்பிட்டு பேசுவது முற்றிலும் தவறானது.ஹத்ராஸ் குற்றவாளிகளுக்கு மாநில அரசு ஆதரவாக செயல்பட்டது. கைது நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டது. அதுமட்டும் இன்றி பாதிக்கப்பட்ட சாட்சிகளை அழிக்க சிறுமியின் உடல் அவசர, அவசரமாக எரிக்கப்பட்டது.யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஹத்ராசில் பாலியல் பலாத்காரம் ஏதும் நடக்கவில்லை என கூறியது. ஆனால் இது பொய் என்று நிரூபிக்கப்பட்டது.தேசிய மகளிர் ஆணையத்தின் ஒரு குழு சாக்கிநாக்காவுக்கு விரைந்த அவசரம், ஹத்ராசில் காட்டப்படவில்லை.

10 நிமிடத்தில் கைது
ஜம்மு- காஷ்மீரில் உள்ள காந்துவாவில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆனால் சாக்கிநாக்கா சம்பவத்தில் குற்றவாளியை 10 நிமிடத்தில் போலீசார் கைது செய்தனர்.அதுமட்டும் இன்றி பாதிக்கப்பட்ட பெண்ணின் இரண்டு மகள்களுடைய கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை கவனித்துக்கொள்ள மாநில அரசு முன்வந்துள்ளது. இப்போது இந்த வழக்கை நீதித்துறையின் கையில் விட்டுவிடுவோம். ஹத்ராஸ் மற்றும் கந்துவா வழக்குகள் போல் அல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக யாரும் வரவில்லை என்பதால் குற்றவாளி நிச்சயமாக தூக்கிலிடப்படுவார்.

சாக்கிநாக்கா சம்பவத்தில் கண்ணீர் வடிப்பது மனதின் உணர்ச்சியை காட்டுகிறது. ஆனால் சிலர் முதலை கண்ணீர் சிந்தும்போது அது பயத்தை உருவாக்குகிறது மற்றும் அந்த சம்பவத்தின் தீவிரத்தன்மையை அழித்துவிடுகிறது.போலீசார் தங்கள் பயணியை செய்யட்டும். ஆனால் யாராவது சாக்கிநாக்கா வழக்கின் கோப்புகளை அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க விரும்பினால் நாம் என்ன செய்ய முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story