மராட்டியத்தில் கல்லூரிகளுக்கான கல்வி ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல் தொடங்கும் - மந்திரி தகவல்


மராட்டியத்தில் கல்லூரிகளுக்கான கல்வி ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல் தொடங்கும் - மந்திரி தகவல்
x
தினத்தந்தி 14 Sep 2021 2:14 AM GMT (Updated: 14 Sep 2021 2:14 AM GMT)

மராட்டியத்தில் கல்லூரிகளுக்கான கல்வி ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை மந்திரி உதய் சாமந்த் தெரிவித்துள்ளார்.

மும்பை,

நாடு முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில மாநிலங்களில் தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. அந்த வகையில் மராட்டிய மாநிலத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக இதுவரை கல்லூரி வகுப்புகள் தொடங்காமல் உள்ளன. 

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான (2021-22) கல்லூரி வகுப்புகள் நவம்பர் 1-ந் தேதி முதல் தொடங்கும் என மாநில உயர் மற்றும் தொழிற் கல்வித்துறை மந்திரி உதய் சாமந்த் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

“நவம்பர் 1-ந் தேதி முதல் கல்வி ஆண்டு தொடங்கும் என தான் கூறினேன். அன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என கூறவில்லை. தற்போது உள்ள சூழலில், நேரடி வகுப்புகளை தொடங்குவது மிகப்பெரிய சவால் ஆகும். 17 முதல் 18 சதவீதம் பேர் தான் 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 

எல்லா மாணவர்களும் 2 டோஸ் தடுப்பூசி போட்டால், நேரடி வகுப்புகளை தொடங்குவது பற்றி நாம் யோசிக்க முடியும். எனவே நவம்பர் மாதம் நிலவும் சூழலை பொறுத்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்குவதா அல்லது ஆன்லைன் மூலம் தொடங்குவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல கொரோனா காலத்தில் கல்லூரி படிப்புகளை முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் மந்திரி எச்சரித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கொரோனா காரணமாக செய்முறை தேர்வை எழுத முடியாமல் போனது மாணவர்களின் தவறல்ல. எனவே அதுபோன்ற மாணவர்களுக்கு எதாவது தொழிற்சாலைகள் வேலைவாய்ப்பை மறுத்தால் அது குறித்து வழக்குப்பதிவு செய்யப்படும்” என்றாா்.

Next Story