காஷ்மீரில் ஏற்படும் தற்காலிக தகவல் தொடர்பு துண்டிப்பு குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விமர்சனம்


காஷ்மீரில் ஏற்படும் தற்காலிக தகவல் தொடர்பு துண்டிப்பு குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விமர்சனம்
x
தினத்தந்தி 14 Sep 2021 3:44 AM GMT (Updated: 14 Sep 2021 3:44 AM GMT)

காஷ்மீரில் ஏற்படும் தற்காலிக தகவல் தொடர்பு துண்டிப்பு கவலைக்குறியது என ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் மிச்சேல் பேச்சலட் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா,

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 48 வது அமர்வின் போது, ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் மிச்சேல் பேச்சலட், காஷ்மீரீல் இந்திய அரசு மேற்கொண்டு வரும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார். அப்போது அவர் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும், ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு வரவேற்பு தெரிவித்தார்.

இருப்பினும் இந்தியாவில் சட்டவிரோத செயல்பாடுகள்(தடுப்புச்) சட்டம் பயன்படுத்தப்படும் விதம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அடிக்கடி தற்காலிகமாக தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவது உள்ளிட்டவற்றை கவலைக்குரியது என்று விமர்சித்தார். இதுபோன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் என்றும் பதட்டத்தை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

“ஜம்மு காஷ்மீரில் பொதுக்கூட்டம் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றுக்கான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களின் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையைப் பயன்படுத்துவதில் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பத்திரிகையாளர்கள் மீதான அழுத்தமும் அதிகரித்து வருகிறது” என்று அவர் கருத்து தெரிவித்தார். 

இந்தியா முழுவதும் சட்டவிரோத செயல்பாடுகள்(தடுப்புச்) சட்டத்தின் தற்போதைய பயன்பாடு கவலைக்குரியது என்று குறிப்பிட்ட அவர், நாட்டில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளில் ஜம்மு காஷ்மீரில் உள்ளது என்றும் கூறினார். மிச்சேல் பேச்சலட்டின் கருத்துகளுக்கு இந்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. காஷ்மீர் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விமர்சனங்களை கடந்த காலங்களில் இந்தியா பல சமயங்களில் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story