மும்பையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ‘நிர்பயா’ சிறப்பு போலீஸ் படை


மும்பையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ‘நிர்பயா’ சிறப்பு போலீஸ் படை
x
தினத்தந்தி 14 Sep 2021 8:32 PM GMT (Updated: 14 Sep 2021 8:32 PM GMT)

பாலியல் குற்றங்களை தடுக்க மும்பையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ‘நிர்பயா’ சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட வேண்டும் என போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ராலே உத்தரவிட்டுள்ளார்.

மும்பை சாக்கிநாக்கா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபாதையில் வசித்து வந்த பெண், கற்பழித்து இரும்பு கம்பியால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

முதல்-மந்திரி உத்தரவு
டெல்லி நிர்பயா வழக்கை போன்று அரங்கேறி உள்ள இந்த சம்பவம் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் பெண்ணை கற்பழித்து கொலை செய்த மோகன்சவுகான் என்ற டிரைவரை கைது செய்து இருந்தனர்.இதேபோல மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அரங்கேறின.இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை போலீஸ் மற்றும் உள்துறை மூத்த அதிகாரிகளுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல், தலைமை செயலாளர் சீத்தாராம்குந்தே, டி.ஜி.பி. சஞ்சய் பாண்டே, மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ராலே மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு போதும் சகித்து கொள்ள முடியாது என உத்தவ் தாக்கரே கூறினார்.மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

‘நிர்பயா’ சிறப்பு போலீஸ் படை
இந்தநிலையில் மும்பையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ‘நிர்பயா’ சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட வேண்டும் என போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ராலே உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மும்பையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ‘நிர்பயா’ படை அல்லது பெண்கள் பாதுகாப்பு சிறப்பு பிரிவு அமைக்கப்பட வேண்டும். இந்த படையில் ஒரு பெண் உதவி இன்ஸ்பெக்டர் அல்லது சப்-இன்ஸ்பெக்டர், பெண் காவலர் மற்றும் ஒரு காவலர், டிரைவர் இடம்பெற வேண்டும். இந்த படையினருக்கு மொபைல்-5 ரோந்து வாகனம் வழங்கப்படும். இந்த வாகனத்திற்கு என பிரத்யேக செல்போன் எண்ணும் ஒதுக்கப்படும்.இவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடங்கள், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

தனியாக செல்லும் பெண்களுக்கு உதவி
இதேபோல நிர்பயா படையினருக்கு 2 நாள் பயிற்சி வழங்கப்படும். இந்த சிறப்பு படையினர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எங்கு பெண்கள் விடுதிகள், குழந்தைகள் காப்பகங்கள், ஆசிரமங்கள் உள்ளது போன்ற விவரங்களை சேகரித்து வைத்து கொள்ளவேண்டும். இதேபோல பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் இடங்களையும் அடையாளம் காண வேண்டும். இதனுடன் குடிசைப்பகுதிகள் அருகே உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடங்கள், பூங்காக்கள், பள்ளி, கல்லூரிகள், தியேட்டர், வணிக வளாகம் ஆகியவற்றையும் சேர்த்து கொள்ள வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் ரோந்து வழித்தடத்தை தயாரித்து கொள்ளலாம்.

நள்ளிரவு நேரங்களில் சாலையில் தனியாக செல்லும் பெண்களுக்கு போலீசார் உதவி செய்ய வேண்டும். அந்த பெண்கள் கேட்டு கொண்டால், போலீசார் அவர்கள் வீடு செல்ல வாகனம் ஏற்பாடு செய்து கொடுக்கலாம். தனியாக வசித்து வரும் முதியவர்களின் பட்டியலை எடுத்து கொண்டு ரோந்து பணியின் போது அவர்களையும் போலீசாா் பார்வையிட வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரி, விடுதிகளிலும் நிர்பயா புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். இதேபோல பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களையும் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story