நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்


நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்
x
தினத்தந்தி 17 Sep 2021 3:33 AM GMT (Updated: 17 Sep 2021 3:33 AM GMT)

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் இன்று நடைபெற உள்ளது.

புதுடெல்லி,
 
நாட்டில் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. 

இதற்கிடையில், ஜி.எஸ்.டி. நடைமுறை அமலுக்கு வந்தது முதல் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதிமந்திரி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதுவரை 44 ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதிக்கு பிறகு நடைபெற்ற அனைத்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் அனைத்து காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேரடியாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநில அரசுகளின் நிதி மந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.

இன்று நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது, 11 கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு கொடுக்கப்பட்ட வரிச்சலுகையை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முடிவு எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

மேலும், உணவு பொருட்களை நுகர்வோருக்கு கொண்டு சேர்க்கும் ஸ்விகி, சோமோட்டோ போன்ற செயலிகளின் சேவை நிறுவனங்களை உணவகங்களின் பட்டியலில் கொண்டு வந்து அவற்றிற்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.  

Next Story