மாநிலத்தின் பொன்விழாவையொட்டி இமாசலபிரதேச சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு
இமாசலபிரதேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்றார்.
சிம்லா,
இமாசலபிரதேச மாநிலம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் முடிவடைந்தன. இதையொட்டி, நேற்று அம்மாநில சட்டசபையின் ஒரு மணி நேர சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
அதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர், மத்திய மந்திரி அனுராக் தாக்குர், முன்னாள் முதல்-மந்திரி பிரேம்குமார் துமல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க் களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஜனாதிபதி பேசியதாவது:-
இமாசலபிரதேசத்துக்கு முதல்முறையாக 1974-ம் ஆண்டு வந்தேன். அதன் இயற்கை அழகில் மனதை பறிகொடுத்தேன். அப்போதிருந்து அவ்வப்போது வந்து செல்கிறேன். மாநிலத்தின் இயற்கை அழகை பாதுகாக்க விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்.
ராணுவத்தில் இந்த மாநிலத்தை சேர்ந்த 1 லட்சத்து 20 ஆயிரம் வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். முப்படை தலைவர் என்ற முறையில் அவர்களை வணங்குகிறேன். பரம்வீர் சக்ரா விருதை முதல்முதலில் பெற்ற மேஜர் சோம்நாத் சர்மா, இமாசலபிரதேசத்தை சேர்ந்தவர்தான்.
கடந்த 2014-ம் ஆண்டிலேயே காகிதமில்லா சட்டசபை நடத்தி, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இமாசலபிரதேசம் விளங்குகிறது. நிதி ஆயோக் அமைப்பின் 2020-2021 அறிக்கைப்படி, மாநிலங்களிடையே 2-வது இடத்தை பிடித்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story