திருப்பதி கோவிலில் அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள் வினியோகம்
திருப்பதி கோவிலில் அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
திருமலை,
கொரோனா தொற்று பரவலால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதியில் இருந்து இலவச தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 8-ந்தேதியில் இருந்து சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மட்டும் வழிபட தினமும் 2 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் புரட்டாசி மாதத்தையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தினமும் மொத்தம் 8 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கவும், இலவச தரிசனத்தில் அனைத்து மாநில பக்தர்கள், வெளிநாட்டுப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவும் முடிவு செய்தது. அதன்படி இலவச தரிசன டோக்கன்கள் தினமும் 8 ஆயிரம் வழங்கப்பட்டு வருகின்றன.
இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து மாநில பக்தர்களும் தங்களின் ஆதார் அட்டையை உடன் கொண்டு வந்து காண்பித்து இலவச தரிசன டோக்கன்கள் பெற்று சாமி தரிசனம் செய்யலாம். அன்றைய நாளுக்கான இலவச சாமி தரிசன டோக்கன்கள் அன்றைய தினமே வழங்கப்படும். இலவச தரிசன டோக்கன்கள் தினமும் அதிகாலையில் இருந்து திருப்பதியில் உள்ள சீனிவாசம் விடுதியில் வழங்கப்படுகிறது, என திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story