சரண்ஜித் நியமனம் அரசியல் தந்திரம்; மாயாவதி குற்றச்சாட்டு


சரண்ஜித் நியமனம் அரசியல் தந்திரம்; மாயாவதி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Sep 2021 7:22 AM GMT (Updated: 20 Sep 2021 7:22 AM GMT)

பஞ்சாப் சட்டசபை தேர்தல் நடைபெற ஒரு சில மாதங்களே உள்ள சூழலில் சரண்ஜித் நியமனம் அரசியல் தந்திரம் போல் தோன்றுகிறது என மாயாவதி கூறியுள்ளார்.


சண்டிகார்,

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2019ம் ஆண்டு, முதல்-மந்திரியுடன் ஏற்பட்ட மோதலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மந்திரிசபையில் இருந்து விலகினார். அதில் இருந்து அவருக்கும், அமரிந்தர் சிங்குக்கும் இடையே பனிப்போர் தொடங்கியது. அது மோதலாகவும் மாறி இருவரும் ஒருவரையொருவர் விமர்சிக்கும் போக்கு நிலவியது.

இந்தநிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்கள், அமரிந்தர் சிங்குக்கு எதிராக மாறின. இதில் மன உளைச்சலுக்கு ஆளான அமரிந்தர் சிங், மாநிலத்தில் தனக்கு எதிராக நடந்து வருகிற சமீபத்திய நிகழ்வுகளை வேதனையுடன் விவரித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். அதனை தொடர்ந்து அவர் அதிரடியாக பதவி விலகினார். மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ராஜினாமா கடிதமும் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டசபை தலைவராக (முதல்-மந்திரியாக) சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி (வயது 58) தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இவர் அமரிந்தர் சிங் மந்திரி சபையில் தொழில், கல்வித்துறை மந்திரியாக பதவி வகித்த தலித் தலைவர் ஆவார். இவர் பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலித் இன முதல்-மந்திரி என்ற சிறப்பை பெறுகிறார்.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் முதல் மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னிக்கு  கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சுக்ஜிந்தர் சிங் ரந்தவா மற்றும் ஓம் பிரகாஷ் சோனி ஆகியோர் துணை முதல் - மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.  பஞ்சாபில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில் முதல் மந்திரியாக  சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இதுபற்றி உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி கூறும்போது, சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்-மந்திரியானதற்கு என்னுடைய வாழ்த்துகள். 

அவரை முன்பே முதல்-மந்திரியாக நியமனம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  பஞ்சாபில் சட்டசபை தேர்தல் நடைபெற ஒரு சில மாதங்களே உள்ள சூழலில், புதிய முதல்-மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி நியமனம் செய்யப்பட்டு இருப்பது அரசியல் தந்திரம் என்றே தோன்றுகிறது என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.


Next Story