சீடருக்கும் ... குருவுக்கும் என்ன தகராறு ...? சாமியார் தற்கொலைக்கு காரணம் என்ன ...? முழு தகவல்கள்


சீடருக்கும் ... குருவுக்கும் என்ன தகராறு ...? சாமியார் தற்கொலைக்கு காரணம் என்ன ...? முழு தகவல்கள்
x
தினத்தந்தி 22 Sep 2021 10:12 AM GMT (Updated: 22 Sep 2021 10:12 AM GMT)

பெண்ணுடன் இருக்கும் மார்பிங் புகைப்படத்தை வைரலாக்கி அவப்பெயரை ஏற்படுத்த திட்டமிட்டதால், உத்தரபிரதேச பிரபல சாமியார் தற்கொலை செய்துகொண்ட தகவல் இப்போது தெரிய வந்துள்ளது.

லக்னோ

இந்தியாவில் சாதுக்களின் பேரமைப்பான அகில பாரதிய அஹரா பரிஷத்தின் தலைவராக இருந்தவர் நரேந்திர கிரி. புகழ்பெற்ற சாமியாரான இவர், உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள பகம்பாரி மடத்தில் தங்கியிருந்தார்.

இவரது அறையை திறந்து பார்த்த சீடர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அறையில் சாமியார் நரேந்திர கிரி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

உடனே அவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், சாமியார் நரேந்திர கிரியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சாமியாரின் அறையில் அவர் எழுதியதாக கருதப்படும் கடிதம் ஒன்றும் இருந்தது.இதன் மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

அதில், தனது சீடர் ஆனந்த் கிரி உள்பட 3 பேரால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருந்தது. ஆனாலும், கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் அந்த கடிதத்தில் இருந்த தகவலை வெளியிட்டனர். அதில், ‘என் தற்கொலைக்கு சீடர்கள் ஆனந்த் கிரி, அத்யா பிரசாத் திவாரி, சந்தீப் திவாரி ஆகியோர்தான் காரணம்.

எனது போட்டோவை, ஒரு பெண்ணுடன் இருப்பது போல மார்பிங் செய்து அதை சமூக வலைதளத்தில் வைரலாக்க, ஆனந்த் கிரி திட்டமிட்டிருப்பதாக எனக்கு தகவல் வந்தது. நான் மரியாதையுடன் வாழ்ந்தவன். அது கெட்டு, அவப்பெயருடன் வாழ விரும்பாததால் கடந்த 13-ஆம் தேதியில் இருந்தே தற்கொலை செய்ய முயற்சித்தேன். தைரியம் வர வில்லை’ என நரேந்திர கிரி கூறி உள்ளார். 

இந்த நிலையில்  ஆனந்த் கிரி உட்பட 3 சீடர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை உபி போலீசார் அமைத்துள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்ரவாளியான  ஆனந்த் கிரி, நல்ல உயரம், நீண்ட சிகை, மற்றும் பிரெஞ்சு தாடி கொண்டவர். இவர், ராஜஸ்தானில் 21 ஆகஸ்ட் 1980 இல் பிறந்தார். தனது பத்தாவது வயதில் நரேந்திர கிரியுடன் அறிமுகமாகி அவரால் ஹரித்வாருக்கு அழைத்து வரப்பட்டார்.

ஆனந்த் கிரி, தனது பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பல ஆண்டுகள் உத்தராகண்டில் வாழ்ந்து பின்னர் பிரயாக்ராஜுக்கு  வந்ததாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

ஆனந்த் கிரி தனது பாஸ்போர்ட்டில் கூட, தாயின் பெயருக்குப் பதிலாக, இந்து சமயப் பெண் தெய்வமான பார்வதி தேவியின் பெயரையும் தந்தை பெயருக்குப் பதிலாகத் தனது குருவின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். தான், பிரிட்டன் மற்றும் கனடா உட்பட உலகின் பல நாடாளுமன்றங்களில் உரையாற்றியுள்ளதாகக் கூறுகிறார்.

யோக குருவாக தனக்கென ஒரு முத்திரை பதித்த ஆனந்த் கிரி, பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். ஆனால் பொது வாழ்க்கையில், சமூகத்தில் அவருக்குக் கிடைத்த இந்த அந்தஸ்து மற்றும் கவுரவத்தில் பெரும் பங்கு பிரயாக்ராஜுக்கு உண்டு.

பிரயாக்ராஜ் நகரில் ஆனந்த் கிரியின் செல்வாக்கை அவரது பேஸ்புக் கணக்கில் உள்ள படங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

பல படங்களில், மூத்த போலீஸ் அதிகாரிகள் முதல் மத்திய மந்திரி வரையிலான தலைவர்கள் அவருக்கு முன்னால் கைகளைக் கூப்பியபடி காணப்படுகிறார்கள்.

வெளிநாடுகளில் யோகா கற்றுத் தரும் ஆனந்த் கிரி, வெளிநாட்டுப் பயணத்தின் போது பாலியல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியுள்ளார்.

ஆனந்த் கிரியை நெருக்கமாக அறிந்தவர்கள் சாமியார் நரேந்திர கிரிக்கும் இடையே மிகவும் நெருக்கமான உறவு இருந்ததாகக் கூறுகிறார்கள்.

ஆனால்  நிலம் தொடர்பான ஒரு விவகாரத்தில்  குருவும் சீடரும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

நரேந்திர கிரி, மடத்தின் நிலங்களை தனிப்பட்ட முறையில் விற்றதாக ஆனந்த் கிரி குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கில், அவர் பிரதமர், ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி விசாரணை கோரியிருந்தார்.

ஆனால் சிறிது காலத்தில், ஆனந்த் கிரி நரேந்திர கிரியிடம் மன்னிப்பு கேட்டார். 

Next Story