உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் மந்திரிசபை விரிவாக்கம்
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
லக்னோ,
பா.ஜனதா ஆளும் உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். இந்த நிலையில் அவரது மந்திரிசபை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் ஜிதின் பிரசாதா உள்பட 7 பேர் புதிய மந்திரிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் ஆனந்தி பென் படேல் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் மத்திய மந்திரியாக இருந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாதா, கடந்த ஜூன் மாதம் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.அவருக்கு மாநில அரசில் கேபினட் மந்திரி பதவி அளிக்கப்பட்டு இருக்கிறது. இவரைத்தவிர மேலும் 6 பேர் இணை மந்திரிகளாகி உள்ளனர். இவர்களையும் சேர்த்து உத்தரபிரதேச மந்திரிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
புதிய மந்திரிகளில் ஜிதின் பிரசாதா பிரமாண சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். மீதமுள்ள 6 பேரில் 3 பேர் தலித் பிரிவையும், 3 பேர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
Related Tags :
Next Story