விவசாயிகள் ‘பாரத் பந்த்’ போராட்டம் - டெல்லி உள்பட வடமாநிலங்களில் பாதிப்பு


விவசாயிகள்  ‘பாரத் பந்த்’  போராட்டம் -  டெல்லி உள்பட  வடமாநிலங்களில் பாதிப்பு
x
தினத்தந்தி 27 Sep 2021 12:16 PM GMT (Updated: 27 Sep 2021 12:16 PM GMT)

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டு ஓராண்டு நிறைவை ஒட்டியும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

புதுடெல்லி,

மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக கூறி அவற்றை வாபஸ் பெற வற்புறுத்தி விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினார்கள்.

வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டு ஓராண்டு நிறைவை ஒட்டி  விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு சார்பில் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் நடத்தும் இந்த பாரத் பந்த்துக்கு பாஜக ஆளாத மற்ற மாநிலங்கள் ஆதரவு தெரிவித்தன. 

காலை 6 மணியில் இருந்து மாலை 4 மணிவரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பெரும்பாலான மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவிதமான சிக்கலும் இல்லை.  எனினும் விவசாயிகள் போராட்டத்தால் ரெயில், சாலை போக்குவரத்து வட இந்தியாவில் பல இடங்களில் பாதிக்கப்பட்டது. டெல்லியில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாகியது. இதனால் டெல்லி நகரம் திணறியது. டெல்லி உ.பி. மாநிலத்தை இணைக்கும் நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகளிலும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பஞ்சாபில் இருந்து அரியானா செல்லும் அனைத்து சாலைகளும் முடக்கப்பட்டு இருந்தன. உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் பல இடங்களிலும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் அங்கும் கடுமையான பாதிப்புகள் இருந்தன. விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்தார். 


Next Story