மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது


மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 30 Sep 2021 2:08 AM GMT (Updated: 30 Sep 2021 4:21 AM GMT)

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜனதா வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். 

இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்-மந்திரி பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்.எல்.ஏ.வும்,வேளாண் அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுவது உறுதியானது. இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வென்றுள்ளார். 

பவானிபூர் தொகுதியில் முதல்-மந்திரி மம்தாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. பா.ஜனதா சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் தொடங்கி உள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. பவானிபூர் தவிர, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய இடங்களிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதியும் நடக்க உள்ளது. 

முன்னதாக மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தலில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்தமனுவை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன் திட்டமிட்டபடி இன்று( 30ம்- தேதி) தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருந்தது. 

Next Story