புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 15-ந்தேதி வரை நீட்டிப்பு


புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 15-ந்தேதி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 30 Sep 2021 10:21 PM GMT (Updated: 30 Sep 2021 10:21 PM GMT)

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி, 

இது குறித்து புதுவை மாநில அரசு செயலாளர் அசோக்குமார் விடுத்துள்ள ஒரு உத்தரவில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் கொரோனா பரவுவதை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது இந்த ஊரடங்கு வருகிற 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இரவு நேர ஊரடங்கானது இரவு 11 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கும்.

கோவில்களில் நடக்கும் திருமணங்களில் ஒரே நேரத்தில் 25 பேர் வரை கலந்துகொள்ளலாம். அதேபோல் திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மிகாமலும் கலந்துகொள்ளலாம்.

சினிமா தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் நள்ளிரவு 12.30 மணிவரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு 9 மணி வரையிலேயே சினிமா தியேட்டர்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தளர்வு மூலம் இரவு காட்சியும் திரையிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

புதுவையில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் வேட்பாளர்கள், அவர்களது ஏஜெண்டுகள், கட்சி உறுப்பினர்கள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story