பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி அமோக வெற்றி!


பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி அமோக வெற்றி!
x
தினத்தந்தி 3 Oct 2021 9:19 AM GMT (Updated: 3 Oct 2021 9:19 AM GMT)

பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜனதா வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் முதல்-மந்திரி பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை இருந்தது. 

இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்.எல்.ஏ.வும், வேளாண் மந்திரியாக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். பவானிபூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டிருந்தார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வெற்றிபெற்றிருந்தார். 

கடந்த செப். 30ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதுபோலவே ஜங்கிபூர் மற்றும் சமஸ்ர்கஞ் ஆகிய தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை அங்கு நடைபெற்றது. சுற்று வாக்குகள் எண்ணக்கையில் மம்தா பானர்ஜி தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். இதேபோல் ஜங்கிபூர் மற்றும் சமஸ்ர்கஞ்ச் தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்குககள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தனர். 

இந்நிலையில் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளார் பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவால் 26,320 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 

Next Story