ஏன் அனுமதிக்கப்படவில்லை...? விமான நிலையத்தில் முதல்வர் தர்ணா


ஏன் அனுமதிக்கப்படவில்லை...? விமான நிலையத்தில் முதல்வர் தர்ணா
x
தினத்தந்தி 5 Oct 2021 10:54 AM GMT (Updated: 5 Oct 2021 10:54 AM GMT)

'நான் ஏன் அனுமதிக்கப்படவில்லை?' என லக்னோவிமான நிலையத்தில் முதல்வர் பூபேஷ் பாகெல் தர்ணாவில் ஈடுபட்டார்.

லக்னோ

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் லகிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

இதற்கிடையில், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரை சேர்ந்தவர் ஆவார். இந்த கிராமத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பா.ஜ.க- வினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பா.ஜ.க.வினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால், அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை மேலும் பரவாமல் இருக்க லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லகிம்பூர் கேரி மாவட்டத்தில் வன்முறை நடைபெற்ற பகுதிக்கு தான்  நேரில் வர உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகெல் அறிவித்தார். அதேபோல், வன்முறை நடைபெற்ற பகுதியை நேரில் பார்வையிட உள்ளதாக பஞ்சாப் துணை முதல் மந்திரி சக்ஜீந்தர் ரந்தவாலாவும் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து சத்தீஸ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகெல் மற்றும் பஞ்சாப் துணை முதல்-மந்திரி சக்ஜீந்தர் ரந்தவாலா உத்தரபிரதேசத்திற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என லக்னோ விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது

சத்தீஸ்கார் முதல் மந்த்திரி  பூபேஷ் பாகெல், இன்று  லக்னோ விமான நிலையம் வந்தடைந்தார்.அங்கிருந்து பிரியங்கா காந்தி தடுப்பு காவலில் வைக்கபட்டு உள்ள இடத்திற்கு செல்ல முயன்றார் ஆனால்  ஆனால் அவர் விமான நிலையத்திற்கு வெளியே அனுமதிக்கப்படவில்லை . இதை தொடர்ந்து விமான நிலையத்தில் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பாகெல் டுவீட் செய்த ஒரு வீடியோவில், லகிம்பூர் கேரிக்குச் செல்லும் எண்ணம் இல்லாதபோது, விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதை ஏன் தடுத்தீர்கள் என்று போலீஸ் அதிகாரிகளிடம் அவர் கேள்வி எழுப்பினார்.



Next Story