நீட் நுழைவுத்தேர்வு புதிய பாடத்திட்டம் அடுத்த ஆண்டு அமல் - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்


நீட் நுழைவுத்தேர்வு புதிய பாடத்திட்டம் அடுத்த ஆண்டு அமல் - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 6 Oct 2021 8:03 PM GMT (Updated: 6 Oct 2021 8:03 PM GMT)

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான மாற்றப்பட்ட நீட் நுழைவுத்தேர்வு பாடத்திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்ததற்கு எதிராக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிரதீக் ரஸ்தோகி உள்ளிட்ட 41 டாக்டர்கள் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. 

நேற்றுமுன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டத்தை ஏன் அவசரகதியில் மாற்ற வேண்டும்? அதிகாரம் உள்ளது என்பதற்காக மாற்றினீர்களா? சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான 500 இடங்களை நடப்பாண்டு நிரப்பாவிட்டால் வானம் இடிந்து விழவா போகிறது?

அவசரகதியிலான நடவடிக்கை மருத்துவக்கல்விக்கு நல்லதல்ல. மருத்துவக்கல்வி வணிகமாகிவிட்டது போல, மருத்துவக்கல்வியை முறைப்படுத்துதலும் வணிகமாகிவிட்டதாக எண்ண தோன்றுகிறது. புதிய பாடத்திட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பான விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி ஆஜராகி, இந்த விவகாரத்தில் நீதிபதிகள் தெரிவித்த ஆலோசனைகளை ஏற்றும், மாணவர்களின் நலன் கருதியும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான மாற்றப்பட்ட நீட் நுழைவுத்தேர்வு பாடத்திட்டத்தை அடுத்த 2022-ம் ஆண்டு முதல் அமல்படுத்துவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது தேர்வு பழைய பாடத்திட்டத்தின்படியே நடைபெறும் என தெரிவித்தார்.

அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான மாற்றப்பட்ட நீட் நுழைவுத்தேர்வு பாடத்திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்துவது என மத்திய அரசும், நிபுணத்துவ அமைப்புகளும் முடிவெடுத்துள்ளன. எனவே பாடத்திட்ட மாற்றத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் முடித்துவைக்கப்படுகின்றன.

இருப்பினும், அடுத்த ஆண்டு முதல் திட்டமிடப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான மாற்றப்பட்ட நீட் நுழைவுத்தேர்வு பாடத்திட்டத்தின் செல்லுபடித்தன்மை குறித்து தற்போது தீர்மானிக்கவேண்டிய அவசியம் எழவில்லை. எதிர்காலத்தில் விசாரிக்கப்படலாம் என உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Next Story