ஜனநாயக அரசுகளின் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி


ஜனநாயக அரசுகளின் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி
x
தினத்தந்தி 7 Oct 2021 6:47 PM GMT (Updated: 7 Oct 2021 6:47 PM GMT)

குஜராத் முதல்-மந்திரி, இந்தியாவின் பிரதமர் என ஜனநாயக அரசுகளின் தலைவராக 20 ஆண்டுகளை பிரதமர் மோடி நேற்று நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவருக்கு பா.ஜனதா தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

கடின உழைப்பு, பொது சேவை
குஜராத்தின் மேசனா மாவட்டத்துக்கு உட்பட்ட வேத்நகரில் 1950-ம் ஆண்டு பிறந்த பிரதமர் நரேந்திர மோடி, சிறு வயது முதலே தன்னை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவில் இணைத்துக்கொண்டார். அதன்மூலம் அவரது பொது வாழ்க்கைப்பயணம் தொடங்கியது.தனது கடின உழைப்பு மற்றும் அயராத பொது சேவை போன்றவற்றால், மாநில எல்லையை தாண்டி தேசிய அளவில் புகழ் பெறத்தொடங்கினார். இதன் காரணமாக கட்சியில் பெரிய பெரிய பதவிகள் அவரை தேடி வந்தன. அவற்றிலும் மோடியின் தன்னிகரற்ற பணிகள் தொடர்ந்ததால் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் முதல்-மந்திரி பதவியை எட்டிப்பிடித்தார். அந்த பதவியை பயன்படுத்தி, குஜராத் மாநிலத்தை இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உயர்த்திக்காட்டினார்.

பிரதமர் பதவி
இதன் விளைவு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை வழிநடத்தும் பிரதமர் பதவி அவரை தேடி வந்தது. 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 2-வது முறையாக இந்தியாவின் பிரதமராக வெற்றிகரமாக நாட்டை வழிநடத்தி வருகிறார்.குஜராத்தின் சிறிய கிராமத்தில் பிறந்த இன்று சர்வதேச தலைவராக உயர்ந்து நிற்கும் பிரதமர் மோடி, குஜராத் மாநில முதல்-மந்திரியாக அதாவது, ஒரு ஜனநாயக அரசின் தலைவராக முதல் முறையாக கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முடி சூட்டப்பட்டார். பின்னர் 2014 முதல் பிரதமர் பதவியில் தொடர்ந்து வருகிறார். இதன் மூலம் ஒரு ஜனநாயக அரசின் தலைவராக 20 ஆண்டுகளை நேற்று நிறைவு செய்துள்ளார்.இதையொட்டி அவரது பா.ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. குஜராத்துக்கும், இந்தியாவுக்கும் மோடியின் பங்களிப்பை விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

முதன்மை ஊழியர்
ஜனநாயக அரசின் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி பிரதமர் மோடி கூறுகையில், ‘20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு புதிய பொறுப்பை பெற்றுக்கொண்டேன். எனது மக்கள் சேவை பயணத்தில், பல்லாண்டுகளாக மக்கள் மத்தியில்தான் வாழ்ந்துவந்தேன். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் குஜராத் முதல்-மந்திரி எனும் ஒரு புதிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது ’ என்று தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் கூறியிருந்தது.பிரதமர் அலுவலகம் மேலும் தனது டுவிட்டர் தளத்தில், ‘ஒரு அரசின் தலைவராக பிரதமர் மோடி இன்று (நேற்று) 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். ஒரு சுயசார்பு இந்தியாவுக்காக உழைக்கும் முதன்மை ஊழியர் என தன்னை அடிக்கடி அவர் கூறுவார்’ என்று குறிப்பிட்டு இருந்தது.அரசின் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடிக்கு பா.ஜனதா மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

ஜே.பி.நட்டா, அமித்ஷா வாழ்த்து
அந்தவகையில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது வாழ்த்து செய் தியில், ‘அரசின் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடிக்கு எனது இதயப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு முதன்மை ஊழியராக, இந்தியாவை ஒரு உலகளாவிய சக்தியாக அவர் உருவாக்கி உள்ளார். மேலும் அவர், சேவை அமைப்பு என்ற மந்திரத்தையும் எங்கள் கட்சிக்கு தந்துள்ளார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.மேலும் அவர் வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்றில் பிரதமர் மோடி அமல்படுத்திய பல்வேறு வளர்ச்சித்திட்டங்களையும் அவர் பட்டியலிட்டு இருந்தார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றும் அதிர்ஷ்டத்தை பெற்றவன் நான். முதலில் குஜராத் அரசிலும், கட்சியிலும் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றேன். பின்னர் மத்திய அரசிலும் மோடிஜியின் தலைமையின் கீழ் பணியாற்றுகிறேன். மோடியின் தலைமையில் வலுவான மற்றும் தன்னம்பிக்கை பெற்ற இந்தியாவின் உறுதியை உணர நாம் அனைவரும் நம்மால் முடிந்ததை செய்வோம்’ என்று கூறியுள்ளார்.

இதைப்போல மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், மன்சுக் மாண்டவியா உள்பட பலர் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருந்தனர்.


Next Story