லகிம்பூர் கேரி விவகாரம்; சித்துவின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு


லகிம்பூர் கேரி விவகாரம்; சித்துவின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு
x
தினத்தந்தி 9 Oct 2021 8:28 AM GMT (Updated: 9 Oct 2021 8:49 AM GMT)

லகிம்பூர் கேரி விவகாரத்தில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்துவின் உண்ணாவிரத போராட்டம் நிறைவடைந்து உள்ளது.

சண்டிகார்,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இந்த போராட்டத்தில் லகிம்பூர் கேரி மாவட்ட விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

இதற்கிடையில், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரை சேர்ந்தவர் ஆவார். இந்த கிராமத்தில் கடந்த 3ந்தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அண்டை கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பா.ஜ.க.வினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பா.ஜ.க.வினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால், அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை மேலும் பரவாமல் இருக்க லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன.

வன்முறை நடைபெற்ற பன்வீர்பூருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி சென்றனர்.  இந்நிலையில், லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட வேண்டும் என கோரி பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவர், வன்முறையில் உயிரிழந்த பத்திரிகையாளர் ராமன் காஷ்யப்பின் வீட்டில் போராட்டம் நடத்தி வந்துள்ளார்.  இந்நிலையில், மத்திய இணை மந்திரி அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஷ்ரா போலீசில் இன்று ஆஜரானார்.

இதனை தொடர்ந்து, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்துவின் உண்ணாவிரத போராட்டம் நிறைவடைந்து உள்ளது.


Next Story