கேரளாவில் வரும் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


கேரளாவில் வரும்  நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
x
தினத்தந்தி 9 Oct 2021 10:30 AM GMT (Updated: 9 Oct 2021 10:30 AM GMT)

கேரளாவில் கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரம் அடைந்ததையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது.

இதனால் வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் 1 வகுப்பு முதல் 7 வகுப்பு மற்றும் 10 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

நவம்பர் 1-ந்தேதி முதல் கேரளாவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது பெற்றோர் அனுமதியுடன் வரும் மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மாணவர்களை சமூக இடைவெளியுடன் வகுப்புகளில் அமர வைக்க வேண்டும். இதை பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல் 2 வாரங்கள் மாணவர்களுக்கு மதியம் வரை மட்டுமே ஆசிரியர்கள் பாடங்களை நடத்த வேண்டும். பள்ளியை தூய்மையாக வைத்திருப்பதோடு, கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது குறித்து பள்ளிகள் முடிவு செய்து கொள்ளலாம்.

மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் தொடர்ந்து ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்த வேண்டும். ஆட்டோக்களில் 3 மாணவர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்ப நிலையை தினமும் பரிசோதனை செய்ய வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் அவசர நேரத்தில் டாக்டர்களின் சேவை உறுதி செய்யப்படும். பள்ளி மாணவர்கள் முதல் 2 வாரங்களுக்கு சீருடை அணிவது கட்டாயம் இல்லை. மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story