டி.கே.சிவக்குமார் பொய் சொல்கிறார்: குமாரசாமி


டி.கே.சிவக்குமார் பொய் சொல்கிறார்: குமாரசாமி
x
தினத்தந்தி 9 Oct 2021 8:24 PM GMT (Updated: 9 Oct 2021 8:24 PM GMT)

மணகுலி சந்தித்து பேசியதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும், இந்த விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் பொய் பேசுவதை நிறுத்த வேண்டும் என்றும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மணகுலி சந்தித்து பேசினார்
விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த மணகுலி உடல்நலக்குறைவால் பலியானார். இதையடுத்து, சிந்தகி தொகுதிக்கு வருகிற 30-ந் தேதி இடைத்தோ்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மணகுலியின் மகன் அசோக் மணகுலி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை, ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து காங்கிரசுக்கு இழுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மனகுலி உயிர் இழக்கும் முன்பாக 15 நாட்களுக்கு முன்பு, அவர் தன்னுடைய மகனுடன் வந்து சந்தித்து பேசியதாகவும், காங்கிரசில் சேர விரும்புவதாகவும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். 

இதற்கு பதிலடி கொடுத்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது;-

பொய் பேசுவதை நிறுத்த...
ஜனதாதளம்(எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த மணகுலி, டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் மணகுலி உயிர் இழக்கும் முன்பாக தொடர்ந்து 19 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதற்கு முன்பு ஒரு மாதம் விஜயாப்புரா ஆஸ்பத்திரியில் அவர் சிகி்ச்சை பெற்றிருந்தார். அப்படி இருக்கும் போது, அவர் உயிர் இழப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக டி.கே.சிவக்குமாரை சந்தித்து, தனக்கு உடல் நிலை சரியில்லாததால், தனது மகனை காங்கிரசில் சேர்த்து கொள்ளும்படி, அவரால் எப்படி சொல்ல முடியும்.

மணகுலி இறந்து விட்டதால், அவரை பற்றி தேவையில்லாமல் எதுவும் கூறக்கூடாது. அவருக்கு அவமானம் ஏற்படுத்தும் விதமாக டி.கே.சிவக்குமார் பொய் சொல்ல கூடாது. பொய் சொல்வதை டி.கே.சிவக்குமார் நிறுத்த வேண்டும். சிந்தகி தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெற மக்களிடம் தவறான தகவலை தெரிவிக்க கூடாது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மணகுலி பற்றி தவறாக பேசுவதை டி.கே.சிவக்குமார் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.


Next Story