உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து மராட்டியத்தில் நாளை முழு அடைப்பு


உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து மராட்டியத்தில் நாளை முழு அடைப்பு
x
தினத்தந்தி 9 Oct 2021 8:49 PM GMT (Updated: 9 Oct 2021 8:49 PM GMT)

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து மராட்டியத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதனை ஆளும் கட்சிகள் கூட்டாக அறிவித்தன.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

லகிம்பூர்கேரி வன்முறை
உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அஜய் மிஸ்ரா, மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது விவசாயிகள் மீது பா.ஜனதாவினர் காரை மோதினர். இதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு ஏற்பட்ட வன்முறையில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 6 பேர் பலியானார்கள். விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
4 விவசாயிகள் உள்பட 8 பேர் பலியான இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

முழு அடைப்பு போராட்டம்
இந்தநிலையில் லகிம்பூர் கேரி வன்முறையை கண்டித்து மராட்டியத்தில் நாளை (11-ந் தேதி) முழு அடைப்புக்கு ஆளும் கட்சிகள் அழைப்பு விடுத்து உள்ளன. இதுதொடர்பான முடிவு கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த மகாவிகாஸ் கூட்டணியின் மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.இது குறித்து தேசியவாத காங்கிரசை சேர்ந்த மந்திரி ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், “லகிம்பூர் கேரி வன்முறை சம்பவத்திற்கு கண்டனத்தை பதிவு செய்வது அவசியம் என முடிவு செய்து உள்ளோம். பா.ஜனதா கொடூரமாக நடந்து கொள்கிறது. விவசாயிகளை நசுக்க முயற்சி செய்கிறது. எனவே 11-ந் தேதி மாநிலத்தில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டு இருக்கும்” என்றார்.இதேபோல சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே, காங்கிரஸ் மந்திரி பாலா சாகிப் தோரட்டும் மாநிலத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என கூறியிருந்தனர்.

முழு பலத்துடன் கலந்து கொள்வோம்
இந்தநிலையில் முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக நேற்று சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி., தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது சஞ்சய் ராவத் தங்களது கட்சி முழு பலத்துடன் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் என்றார்.மேலும் அவர் கூறுகையில், “மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மக்கள் விழித்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த போராட்டத்தில் விவசாயிகள் தனியாக இல்லை. அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் செயல்பாடு மராட்டியத்தில் இருந்து தொடங்க வேண்டும். ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் யுக்தி தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஆலோசனை நடத்தினேன்” என்றார்.

மராட்டியத்தில் ஆளும் கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருப்பதால் நாளை மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story