மராட்டியத்தில் முழு அடைப்பு: வெறிச்சோடிய சாலைகள்; 8 பஸ்கள் சேதம்


மராட்டியத்தில் முழு அடைப்பு:  வெறிச்சோடிய சாலைகள்; 8 பஸ்கள் சேதம்
x
தினத்தந்தி 11 Oct 2021 5:21 AM GMT (Updated: 11 Oct 2021 5:21 AM GMT)

லகிம்பூர் கேரி வன்முறையை கண்டித்து மராட்டியத்தில் நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்தினால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

புனே,

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூரி கேரி மாவட்டத்தில் பா.ஜனதாவினர் காரை மோதியதில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர். இதையடுத்து நடந்த வன்முறையில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 6 பேர் பலியானார்கள். இந்த வன்முறை சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.

இந்தநிலையில் உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மராட்டியத்தில் இன்று ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் 3 கட்சி செய்தி தொடர்பாளர்களும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியிருந்தனர். அப்போது சிவசேனா முழு வீச்சில் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கு பெறும் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியிருந்தார்.

எனினும், மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.  3 கம்பெனி மாநில ரிசர்வ் போலீசார், 500 ஊர்காவல் படை வீரர்கள், உள்ளூர் ஆயுத படையை சேர்ந்த 400 போலீசார் கூடுதலாக நவராத்திரி பண்டிகைக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மும்பை உள்பட மாநிலம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதலே முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டது. ஆஸ்பத்திரி, ஆம்புலன்ஸ் சேவை, மருந்து கடைகள், பால் சப்ளை போன்ற அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவை அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைகளை மூடவும் ஆளுங்கட்சி வியாபாரிகளுக்கு கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

புனேயில் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் மூடப்படும் என வியாபாரிகள் அறிவித்து உள்ளனர். மும்பையை பொறுத்தவரை பஸ், ரெயில் போக்குவரத்து இயக்கப்படும் என கூறப்படுகிறது. 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவே நகரில் பெஸ்ட் பஸ் கண்ணாடிகளில் கம்பி வலைகள் கட்டப்பட்டு இருந்ததை காண முடிந்தது.
இந்த முழு அடைப்பால் மாநிலம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

எனினும், மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் வாகன போக்குவரத்து முடங்கியது.  சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.  மும்பையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை 8 மணிவரையில், 8 பெஸ்ட் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன.  இதனால் போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு உள்ளது.


Next Story