காஷ்மீரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை - 4 பேர் கைது


காஷ்மீரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை - 4 பேர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2021 8:01 AM GMT (Updated: 13 Oct 2021 8:01 AM GMT)

காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் இன்று நடத்திய அதிரடி சோதனையில் பயங்கரவாத சதித்திட்டம் தீட்டிய வழக்கில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மேலும், பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் 5 பேர் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். 

கடந்த 2 நாட்களில் மட்டும் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும், கடந்த சில நாட்களாக பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள், பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் என நூற்றுக்கணக்கானோர் காஷ்மீர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிஉகள் நடத்திய சோதனையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய வழக்கில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story