கடைசி வாய்ப்பு... சோனியாவுக்கு சித்து 4 பக்க பரபரப்பு கடிதம்


கடைசி வாய்ப்பு... சோனியாவுக்கு சித்து 4 பக்க பரபரப்பு கடிதம்
x
தினத்தந்தி 17 Oct 2021 11:15 AM GMT (Updated: 17 Oct 2021 11:15 AM GMT)

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு பல்வேறு விவகாரங்களை குறிப்பிட்டு சித்து 4 பக்க கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வீரராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து கடந்த 2004ம் ஆண்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். பின்னர், ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தபோது பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளார்.

காங்கிரசில் இணைந்த பின்பு முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங்குடன் மோதல் போக்கு இருந்து வந்தது.  இந்த நிலையில், திடீரென முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்ததுடன், கட்சியில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

இதனையடுத்து, புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார்.  இந்த நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திடீரென நவ்ஜோத் சிங் சித்து விலகினார்.

இதனைத்தொடர்ந்து, சித்துவை காங்கிரஸ் தலைமை சமாதானம் செய்ய முயற்சி செய்தது. இதனால், டெல்லிக்கு சென்ற சித்து, ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் (பொறுப்பு) கே.சி. வேணுகோபாலை சந்தித்து பேசினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்து, நான் காங்கிரஸ் தலைவராக தொடர்வேன். எனக்கு இருந்த அனைத்து பிரச்சினைகளும் சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டு விட்டன என கூறியுள்ளார்.  இதன் தொடர்ச்சியாக ராஜினாமாவை அவர் வாபஸ் பெற்றார்.

இந்த நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு பஞ்சாப் தலைவர் சித்து 4 பக்க கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.  அந்த கடிதத்தில், வருகிற 2022ம் ஆண்டு பஞ்சாப் சட்டசபை தேர்தலில் கட்சி வெற்றி பெறுவதற்கான 13 அம்சங்கள் கொண்ட விவரங்களை விளக்கியுள்ளார்.

இதுவே மீண்டெழுவதற்கான கடைசி வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.  அந்த கடிதத்தில், போதைப்பொருள் விவகாரம், வேளாண் விவகாரம், வேலைவாய்ப்பு, மணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பற்றி குறிப்பிட்டு உள்ளதுடன் அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

வரவுள்ள பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையில் இடம்பெற உள்ள 13 அம்சங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் சித்து குறிப்பிட்டு உள்ளார்.  இதுபற்றிய அறிக்கையை சித்து தனது டுவிட்டரில் இன்று வெளியிட்டு உள்ளார்.  இதனால் பஞ்சாப் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story