மக்களே எச்சரிக்கை..! கொரோனா வேகமாகப் பரவ வாய்ப்பு..! - நிதி ஆயோக்


மக்களே எச்சரிக்கை..! கொரோனா வேகமாகப் பரவ வாய்ப்பு..!  - நிதி ஆயோக்
x
தினத்தந்தி 18 Oct 2021 5:43 AM GMT (Updated: 18 Oct 2021 6:30 AM GMT)

கொரோனா அழிந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. ஏனெனில், பல நாடுகளில் கொரோனா தொற்று பல அலைகளாகத் தொடர்ந்து தாக்கி வருவதைக் காண முடிகிறது.

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் செல்கிறது. தினசரி பாதிப்பு தொடர்ந்து சரிவு அடைந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,596- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 19,582- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 166- பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 81 ஆயிரத்து 315- ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 89 ஆயிரத்து 694- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 39 ஆயிரத்து 331- ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரத்து 290- ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய 3 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. 12 வயது முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்கு செலுத்துவதற்காக 'சைகோவ்-டி' என்ற பெயரில் ஊசியின்றி செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியை சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தத் தடுப்பூசியை சிறார்களுக்கு அவசர காலத்தில் செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியையும் சிறார்களுக்கு செலுத்துவதற்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினரும், கொரோனா தடுப்புப் பிரிவின் தலைவருமான வி.கே.பால் கூறியதாவது: -

ஏற்கெனவே கோவேக்சின் தடுப்பூசி பெரியவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. சிறாா்களுக்கு செலுத்தப்பட வேண்டுமெனில் உற்பத்தியையும் விநியோகத்தையும் அதிகரிக்க வேண்டும்.

கொரோனா நோய்த்தொற்று அதிகமாக சிறார்களைத் தாக்குகிறது. அதே சமயம், சிறார்களிடம் கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்படுவதில்லை. அவர்களிடம் இருந்து பிறருக்கு நோய்த்தொற்று எளிதில் பரவுகிறது. சிறார்களுக்கான தடுப்பூசிகள் போதிய அளவில் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு, தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கலாம்.

மேலும், சைகோவ்-டி தடுப்பூசியை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுமம் ஆய்வு செய்து வருகிறது. இதுபோன்ற ஆய்வுகளுக்குப் பிறகு சிறாா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் ஓய்ந்துள்ளது. இதனால், கொரோனா அழிந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. ஏனெனில், பல நாடுகளில் கொரோனா தொற்று பல அலைகளாகத் தொடர்ந்து தாக்கி வருவதைக் காண முடிகிறது.

இந்தியா தற்போது இக்கட்டான சூழலைக் கடந்து வருகிறது. அடுத்து வரும் பண்டிகைக் காலத்தில் மக்கள் கூடும்போது, கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றார்.

Next Story