எரிபொருள் விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடும் பாதிப்பு; பிரியங்கா காந்தி


எரிபொருள் விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடும் பாதிப்பு; பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 18 Oct 2021 8:16 AM GMT (Updated: 18 Oct 2021 8:16 AM GMT)

பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு கடுமையாக உயர்த்தியுள்ளதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்துள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டர் 100- ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  குறிப்பாக விமான எரிபொருளை விட பெட்ரோல், டீசல் விலை அதிக விலைக்கு விற்பனையாகிறது. 

அதாவது, டெல்லியில் விமானத்துக்கான எரிபொருள் ஒரு லிட்டா் ரூ.79 ஆக உள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை அதைவிட 30 சதவீதத்துக்கு மேல் அதிகமாக உள்ளது. இதன்மூலம் விமானத்தை இயக்குவதைவிட இருசக்கர வாகனத்தை இயக்குவதற்கான செலவு அதிகரித்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 84.8 டாலராக உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு இதுவே 73.51 டாலராக இருந்தது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை. இந்தியாவிலேயே மிக அதிகமாக ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரில் பெட்ரோல் ஒரு லிட்டா் ரூ.117.86 ஆகவும், டீசல் ஒரு லிட்டா் ரூ.105.95 ஆகவும் உள்ளது.

இந்த நிலையில், எரிபொருள் விலை உயர்வு நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளதாக  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசை சாடியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, விமான எரிபொருள் விலையை விட பெட்ரோல்,டீசல் விலை அதிகமாக உள்ளதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி  மத்திய அரசை சாடியுள்ளார்.  மேலும், நடுத்தர மக்கள் சாலை வழி பயணம் மேற்கொள்வது கூட கடினமானதாக மாறியுள்ளதாக பிரியங்கா காந்தி தனது டுவிட்டில் பதிவிட்டுள்ளார். 

Next Story