புதிய கட்சியை தொடங்குவதை உறுதி செய்தார் அமரிந்தர் சிங்...!
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் 117 இடங்களிலும் போட்டியிடப்போவதாக முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி, சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இதை அமரிந்தர் சிங் அவமானமாக கருதினார். இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் மேலும் வலுவடைந்தது. இதை தொடர்ந்து முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் செப்டம்பர் 18 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் தலைமை தன்னை அவமானப்படுத்திவிட்டதாக வருந்திய அவர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். மேலும், நவ்ஜோத் சிங் சித்து ஆபத்தானவர் என்றும் தேச விரோத செயல்களில் ஈடுபடக்கூடியவர் எனவும் கடுமையாக சாடினார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் அமரிந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல், அமரிந்தர் விரைவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக டுவிட்டரில் அறிவித்து இருந்தார்.
Related Tags :
Next Story