கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு 149 நோயாளிகள் தற்கொலை


கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு 149 நோயாளிகள் தற்கொலை
x
தினத்தந்தி 28 Oct 2021 2:37 AM GMT (Updated: 28 Oct 2021 2:37 AM GMT)

கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான 149 நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.



திருவனந்தபுரம்,

நாட்டில் கொரோனா 2வது அலையின் தீவிரம் குறைந்து வந்த சூழலில் கேரளாவில் தினசரி பாதிப்புகள் அதிகரித்து காணப்பட்டன.  சமீப நாட்களாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்த நிலையில், கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் வினோத் எழுப்பிய கேள்விக்கு மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் அளித்த பதிலில், கேரளாவில் இதுவரை 41 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளனர். 149 நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

ஐ.சி.எம்.ஆர். ஆய்வு அறிக்கையின்படி கேரளாவில் கொரோனா நோய் எதிர்ப்பாற்றல் கண்டறியப்பட்டோர் விகிதம் கடந்த 2020ம் ஆண்டின் மே, ஆகஸ்டு மற்றும் டிசம்பரில் முறையே 0.33%, 0.88% மற்றும் 11.6% ஆக இருந்தது.  நடப்பு 2021ம் ஆண்டு மே மாதத்தில் 44.4 சதவீதமாக இருந்தது.  இந்த ஆண்டு ஆகஸ்டு - செப்டம்பரில் மாநில அரசு நடத்திய நோய் எதிர்ப்பாற்றல் ஆய்வில் இது 82.61 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கேரள மக்களில் ஒரு பெரும் பகுதியினர் கொரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அடைந்துள்ளனர்.  இதனை மாநில அரசின் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.  2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பல்வேறு பிரிவு மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் மிக அதிக அளவாக, கடலோர மக்களிடம் 93.3 சதவீதம் பேரிடம் நோய் எதிர்ப்பாற்றல் காணப்பட்டது
என அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.

எனினும், மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாக கூடிய நிலையில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story