பீகார் குண்டு வெடிப்பு வழக்கு: 9 பேர் குற்றவாளிகள் என என்.ஐ.ஏ. கோர்ட்டு தீர்ப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Oct 2021 2:54 AM GMT (Updated: 28 Oct 2021 2:54 AM GMT)

பீகாரில் 2013-ம் ஆண்டு மோடி பொதுக்கூட்ட மைதானத்தில் குண்டு வெடித்த வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என என்.ஐ.ஏ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பாட்னா, 

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது குஜராத் மாநில முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராகவும் இருந்த நரேந்திர மோடி கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, மைதானத்தில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. குண்டு வெடிப்பாலும், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலாலும் 6 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இந்த வழக்கு, பாட்னாவில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிந்தநிலையில், தனி நீதிபதி குர்விந்தர் மெரோட்ரா நேற்று தீர்ப்பு அளித்தார்.

9 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்தார். இம்தியாஸ் அன்சாரி, முஜிபுல்லா, ஹைதர் அலி, பெரோஸ் அஸ்லம், உமர் அன்சாரி, இப்தேகர், அகமது உசைன், உமைர் சித்திக், அசாருதீன் ஆகியோர் குற்றவாளிகள் ஆவர். பக்ருதீன் என்பவர் விடுவிக்கப்பட்டார். 10 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் 1-ந் தேதி அறிவிக்கப்படும் என்று சிறப்பு அரசு வக்கீல் லாலன் பிரசாத்சிங் தெரிவித்தார்.


Next Story