மாணவனின் ஒரு காலை பிடித்து மாடியில் இருந்து தொங்கவிட்டு மிரட்டிய தலைமை ஆசிரியர்


மாணவனின் ஒரு காலை பிடித்து மாடியில் இருந்து தொங்கவிட்டு மிரட்டிய தலைமை ஆசிரியர்
x
தினத்தந்தி 29 Oct 2021 10:29 AM GMT (Updated: 29 Oct 2021 10:29 AM GMT)

சேட்டை செய்த மாணவனை ஒரு காலை பிடித்து மாடியில் இருந்து தொங்கவிட்டு மிரட்டிய தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி:

உத்தரபிரதேசம் மிர்சாபூரில்  உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது  சோனு யாதவ் என்ற மாணவன்  மற்றொரு மாணவனை கடித்து விட்டான். மாணவனை கடித்ததற்காக தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா சிறுவனை மிரட்டி மன்னிப்பு கேட்க கூறி உள்ளார். ஆனால் சிறுவன் மன்னிப்பு கேட்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், 2ம் வகுப்பு படிக்கும் சோனுவை பிடித்து, மேல் மாடிக்கு இழுத்துச் சென்றார். அங்கு  மன்னிப்பு கேட்காவிட்டால் மாடியில் இருந்து கீழே போட்டுவிடுவதாக அவனது ஒரு காலை பிடித்து மாடியில் இருந்து தொங்கவிட்டவாறு மிரட்டி உள்ளார்.

சிறுவனின் அலறல் மற்றும் அழுகையைக் கேட்ட குழந்தைகள் கூட்டம் கூடிய பிறகுதான் சோனுவை தலைமை ஆசிரியர்  விடுவித்து உள்ளார். 

இது குறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவியதால் தற்போது தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சிறுவனின் தந்தை  ரஞ்சித் யாதவ்  தலைமை ஆசிரியர் செய்தது தவறு, ஆனால்  ஆசிரியர் அன்பினால் செய்தார். அதனால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை" என்று கூறி உள்ளார்.

சிறார் நீதிச் சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ள ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா,கூறும் போது சோனுவின் தந்தை எங்களிடம் அவனை  திருத்தும்மாறு கூறினார். சோனு ரொம்ப குறும்புக்காரன்... குழந்தைகளைக் கடிக்கிறான், ஆசிரியர்களையும் கடிக்கிறான். அவனுடைய அப்பா அவனைத் திருத்தச் சொன்னார். அதனால், அவனைப் பயமுறுத்த முயற்சித்தோம். பயந்து மேல் தளத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கவிட்டேன் என்று அவர் கூறினார். 

Next Story