தாவூத் கூட்டாளியுடன் தேவேந்திர பட்னாவிசுக்கு தொடர்பு - நவாப் மாலிக் வீசிய ஹைட்ரஜன் குண்டு


தாவூத் கூட்டாளியுடன் தேவேந்திர பட்னாவிசுக்கு தொடர்பு - நவாப் மாலிக் வீசிய ஹைட்ரஜன் குண்டு
x
தினத்தந்தி 10 Nov 2021 10:09 AM GMT (Updated: 10 Nov 2021 10:09 AM GMT)

தாவூத் இப்ராகிம் கூட்டாளியுடன் தேவேந்திர பட்னாவிசுக்கு தொடர்பு உள்ளது என மராட்டிய மந்திரி நவாப் மாலிக் கூறினார்.

மும்பை

சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் 26 நாட்களுக்கு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 

ஆர்யன் கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை பிரிவு தலைவரான சமீர் வான்கடே செயல்பட்டு வருகிறார். ஆர்யன் கான் கைது சம்பவத்தில் இருந்து சமீர் வான்கடே மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மராட்டிய மந்திரியுமான நவாப் மாலிக் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். 

இந்த விவகாரம் மராட்டிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை சுற்றி பல்வேறு கட்சிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், போதைப்பொருள் விவகாரம் குறித்து மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிசும், மராட்டிய மந்திரி நவாப் மாலிக்கிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. 

நவாப் மாலிக்கின் நிழல் உலகத்துடனான தொடர்பு குறித்த ஆதாரங்களை வெளிப்படுத்துவேன் என்று கூறிய  தேவேந்திர பட்னாவிஸ் நேற்று   நவாப் மாலிக்கிற்கு மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பு உள்ளது. 

1993 மும்பை குண்டுவெடிப்பில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிழல் உலக நபர் ஒருவருடன் நவாப் மாலிக் சொத்து பேரம் நடத்தி உள்ளார் என குற்றஞ்சாட்டினார்.

இதற்கு நேற்று பதில் அளித்த மராட்டிய மந்திரி நவாப் மாலிக் நாளை ஹைட்ரஜன் வெடிகுண்டு வீசுவேன் என்று தேவேந்திர பட்னாவிஸை எச்சரித்து இருந்தார். அதன் படி இன்று நவாப் மாலிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:-

நிழல் உலகத்துடன் தொடர்புடையவர் அல்லது குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக இருக்கும் எவரிடமும் நான் எந்த சொத்தும் வாங்கவில்லை. நிழல் உலகம்  மற்றும் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் என்னை தொடர்புபடுத்த முயற்சிப்பதன் மூலம், பட்னாவிஸ் என் புகழை கெடுக்க முயற்சிக்கிறார். 

தாவூத் இப்ராகிமின் நெருங்கிய உதவியாளரான ரியாஸ் பதி, போலி பாஸ்போர்ட் மூலம் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 2 நாட்களில் ஜாமீன் வழங்கப்பட்டது. ரியாஸ் பதி ஏன் உங்களுடன் (தேவேந்திர பட்னாவிஸ்) நெருங்கிய தொடர்பில் இருந்தார்?.

நாக்பூரின் பிரபல குற்றவாளி முன்னா யாதவ் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் கட்டுமானத் தொழிலாளர் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.வங்காளதேசத்தினரின் சட்டவிரோதக் குடியேற்றத்தில் ஈடுபட்ட ஹைதர் ஆசம் என்ற ஒருவரை மவுலானா ஆசாத் நிதிக் கழகத்தின் தலைவராக பட்னாவிஸ் நியமித்தார்.

ரியாஸ் பதிக்கு பிரதமரின் விழாவிற்கு செல்லும் அளவு செல்வாக்கு  இருந்தது. பிற நாடுகளைச் சேர்ந்த  நிழல் உலக   தாதாக்கள் தானேவில் தேவேந்திர பட்னாவிஸ் நியமித்த போலீஸ் அதிகாரிகளை சந்தித்து உள்ளனர். 

2016-ல் பணமதிப்பிழப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் கள்ள நோட்டுகள் பிடிபட்டன, ஆனால் 2017 அக்டோபர் 8 வரை, மராட்டிய மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசில் கள்ள நோட்டு விளையாட்டு நடந்தது அதனால்  ஒரு கள்ள நோட்டு வழக்கு கூட பதிவாகவில்லை என்று நவாப்  மாலிக் கூறினார்.

Next Story