ராஜஸ்தானில் புதிய மந்திரிசபை இன்று பதவியேற்பு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Nov 2021 11:32 PM GMT (Updated: 20 Nov 2021 11:32 PM GMT)

ராஜஸ்தானில் மந்திரிகள் நேற்று கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதனைத்தொடர்ந்து புதிய மந்திரிசபை இன்று பதவியேற்கிறது.

ஜெய்ப்பூர், 

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மந்திரிசபையில் மாற்றம் செய்வதற்கு கடந்த சில மாதங்களாக பல தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

குறிப்பாக, முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கிய முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களுடன், அரசுக்கு ஆதரவளிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு தாவிய எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் மந்திரி பதவியை எதிர்பார்க்கின்றனர். அதைத் தொடர்ந்து, மந்திரிசபையில் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் இல்லத்தில் மந்திரிசபை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில், டெல்லியில் இருந்து வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் பொறுப்பாளர் அஜய் மக்கானும் கலந்து கொண்டார்.

இந்த மந்திரிசபை கூட்டத்தில், காங்கிரஸ் மாநில தலைவரும், தொடக்கக் கல்வித் துறை மந்திரியுமான கோவிந்த்சிங் தோத்தாஸ்ரா மற்றும் இரு மந்திரிகள் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலில் அளித்தனர். அதைத் தொடர்ந்து அனைத்து மந்திரிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். மொத்தமுள்ள 21 மந்திரிகளும் ராஜினாமா செய்துவிட்டனர். பின்னர் நேற்று இரவு ராஜ்பவனுக்கு சென்ற முதல்-மந்திரி அசோக் கெலாட், கவர்னர் கல்ராஜ் மிஷ்ராவை சந்தித்து மந்திரிசபை மாற்றம் தொடர்பாக விவாதித்தார்.

ராஜினாமா செய்த மந்திரிகள் அனைவரும் ஜெய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு கூடுகிறார்கள். அதைத் தொடர்ந்து இன்று ராஜ்பவனில் புதிய மந்திரிசபை பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Next Story